75 ஆண்டுகளாக வசித்தாலும் பட்டா வழங்க முடியாது.. தமிழக அரசின் முக்கியமான வாதம்.. ஐகோர்ட் அதிரடி
சென்னை: கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பல ஆண்டுகளாக அதாவது தலைமுறை தலைமுறையாக பட்டா இல்லாத வனப்பகுதிகள் பல்வேறு பழங்குடியின மக்கள் மற்றும் பஞ்சம் பிழைக்க போன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் நிலத்திற்கு இன்று வரை பட்டா பெற முடியாத நிலையே இருக்கிறது. இந்நிலையில் 75 ஆண்டுகளாக முன்னோர்கள் வாழ்ந்தனர் என்று வனப்பகுதியில் உள்ள நிலத்துக்கு பட்டா கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தலைமுறை தலைமுறையாக வனப்பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பட்டா கிடைப்பதில் சிக்கல் நீடிக்க இந்தியாவில் வன நிலங்கள் அனைத்தும் 'மத்திய வனப் பாதுகாப்புச் சட்டம் 1980'-ன் கீழ் வருவதே காரணம். ஒரு நிலம் வனப்பகுதி (காப்புக்காடு) என்று அறிவிக்கப்பட்டுவிட்டால், அங்கு தனிநபர்களுக்குப் பட்டா வழங்குவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை. மாநில அரசே நினைத்தாலும், மத்திய அரசின் வனத்துறையின் அனுமதி இல்லாமல் நிலத்தை வகைமாற்றம் செய்ய முடியாது.

வலுவான ஆதாரம் வேண்டும்
'பாரம்பரிய வனவாசிகள்' என்பதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே நில உரிமை அங்கு வசிப்பவர்களுக்கே கிடைக்கும். 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'வன உரிமைச் சட்டம்' பழங்குடியினர் மற்றும் பிற வனவாசிகளுக்கு நில உரிமை வழங்க வழிவகை செய்கிறது. ஆனால் இதில் ஒரு நிபந்தனை உள்ளது: இவர்கள் அந்த நிலத்தில் மூன்று தலைமுறைகளாக (சுமார் 75 ஆண்டுகள்) வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசின் நிலைப்பாடு என்ன
நீதிமன்றங்களும் அரசாங்கமும் காடுகளைப் பாதுகாப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை உலகளாவிய பல்லுயிர் பெருக்க மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனித நடமாட்டம் அதிகரித்தால் காடுகள் அழியும், வனவிலங்கு - மனித மோதல்கள் அதிகமாகும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பட்டா வழங்குவதை விட, அந்த மக்களைச் சமவெளிக்கு இடமாற்றம் செய்யவே வனத்துறை முன்னுரிமை அளிக்கிறது. இதனால் பலர் பட்டா பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
சேலம் மக்கள் முறையீடு
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் உள்பட பலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் "சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், சூரியூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் எங்கள் முன்னோர் 75 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து, விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்கள்.
290 ஏக்கர் நிலம்
எங்கள் முன்னோர் குடியிருந்த சுமார் 290 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்கவேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தோம். எங்கள் விண்ணப்பத்தை கலெக்டர் நிராகரித்துவிட்டார். அப்படி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கும் தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து, இந்த நிலத்துக்கு எங்களது பெயரில் பட்டா வழங்க சேலம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
உரிமை உள்ளது
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.குமரேஷ்பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006-ன்படி பழங்குடியினருக்கு மட்டும் பொருந்தாது. மற்றவர்களுக்கும் பொருந்தும். இந்த சட்டத்தின்படி நிலத்துக்கு பட்டா கேட்க மனுதாரர்களுக்கு முழு உரிமை உள்ளது" என்று வாதிடப்பட்டது.

உரிமை கோர முடியாது
தமிழக அரசு தரப்பில், "இந்த நிலத்தில் மனுதாரர்களின் முன்னோர் வசித்தனர் என்பதற்கு ஒரு சின்ன ஆதாரத்தைக் கூட மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை. இவர்கள் வனப்பகுதி நிலத்தை சார்ந்து வாழவில்லை. அதனால், சட்டத்தில் கூறியுள்ள பிற பாரம்பரிய வனவாசிகளை போல இவர்கள் உரிமை கோர முடியாது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "வனப்பகுதிக்குள்ள நிலத்துக்கான பட்டாவை மனுதாரர்களுக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிட முடியாது. இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications