உங்க வீட்டில் எல்லாருக்குமே ஹிந்தி தெரியுதே! மும்மொழி கொள்கையை எதிர்க்கும் விஜயை விளாசிய சரத்
சென்னை: விஜய்க்கு புரிதல் இருக்கா என்று தெரியவில்லை. மும்மொழி கொள்கை வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் அவரது குடும்பத்தில் எல்லோரும் ஹிந்தி படித்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஹிந்தி படிக்க கூடாது என்று எப்படி சொல்லலாம்? என்று நடிகரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான சரத்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சமத்துவ கட்சியை தொடங்கிய நடிகர் சரத்குமார் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். சரத்குமார் மனைவி ராதிகாவுக்கு பாஜக சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனாலும் ராதிகா அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சரத்குமாருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவர் பாஜகவில் வெறும் உறுப்பினராகவும், முக்கிய பிரமுகராகவும் மட்டுமே வலம் வருகிறார்.
இந்நிலையில் தான் சென்னை பெரியமேட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் நடிகர் சரத்குமார் பங்கேற்றார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக சரத்குமார் கூறியதாவது:
அன்பு சகோதரர் (விஜய்) நீட் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். மும்மொழி கொள்ளை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். கவர்னர் இருக்க கூடாது என்று கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் இருக்க கூடாது என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லாம் சொல்லும்போது அவருக்கு புரிதல் இருக்கா என்று தெரியவில்லை. மும்மொழி கொள்கை வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் உங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஹிந்தி படித்து இருக்கிறார்கள்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போனாலும் சரி ஹிந்தியில் பேசினால் அனைவருக்கும் புரிகிறது. அப்படி இருக்கும்போது ஹிந்தி படிக்க கூடாது என்று எப்படி சொல்லலாம்? அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்றுகொள்ளக்கூடாது என்று சொல்லும் நீங்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் ஏன் ஹிந்தியை கற்று கொடுக்க அனுமதிக்கிறீர்கள். ஏன் அரசு பள்ளிகளில் ஹிந்தி படிக்க வாய்ப்பு வழங்ககூடாது? கொடுத்து பாருங்கள் அரசு பள்ளி மாணவர்கள் படிக்கிறார்களா? இல்லையா என்று?. எனவே மும்மொழி கொள்கை வரவேற்க வேண்டிய ஒன்று'' என்று கூறினார்.
முன்னதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை கடந்த மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடத்தினார். இதில் கட்சி கொள்கை, கொடி விளக்கத்தை அவர் வெளியிட்டார். பாஜகவை தனது கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் அவர் கருதுவதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில் தான் மும்மொழி கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் விஜய் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். நடிகர் விஜயின் இந்த கருத்தை பாஜகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் நடிகர் சரத்குமாரும் விளாசியுள்ளார்.












Click it and Unblock the Notifications