ஆளுநர் போற இடத்தில் எல்லாம் பிரச்சனை.. அவங்க வேலை முதல்வர் ஸ்டாலின்கிட்ட பலிக்காது.. திருமா அட்டாக்!
சென்னை: இந்த ஆளுநர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் பிரச்சனைகளை உருவாக்குவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், அவரது முயற்சிகளை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த ஆவடியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, திருமாவளவன் மணி விழா மற்றும் அம்பேத்கர் தொழிலாளர் சங்க ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், இந்த ஆளுநர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் பிரச்சனைகளை உருவாக்குவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக, பாஜக ஆட்சி செய்யாத, பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் அவர்களது முயற்சி பலிக்காது. முதல்வர் ஸ்டாலின், அவர்களின் முயற்சிகளை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஜனநாயக சக்திகள் அனைவரும் அவருக்கு உற்ற துணையாக இருப்போம் எனத் தெரிவித்தார்.
மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "எந்தவொரு திட்டமாக இருந்தாலும் வரையறை உருவாக்குவார்கள். முழுமையாக வரையறைகள் வெளிவரட்டும், பார்க்கலாம். இப்போது, அரசுக்கு எதிராக ஏதாவது பேசவேண்டும் எனப் பேசி வருகிறார்.
தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து வருகிறார் அண்ணாமலை. இந்திய அளவில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நடைமுறைபடுத்த பரிசீலனை செய்கின்றனர். பலராலும் வரவேற்பு பெற்றுள்ள சிறப்பு திட்டமாக இது உள்ளது. இதனை பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்" எனச் சாடினார்.












Click it and Unblock the Notifications