டெலிகாரம் ஒரு டார்க் வெப்.. ஒரு நொடியில் ஆதாரங்கள் காலி.. மத்திய அரசு அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரபல டெலிகாரம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது டெலிகாரம் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த மத்திய அரசு, டெலிகாரம் செயலி சிறார் ஆபாசப் படங்களைப் பகிரவும் தீவிரவாத கருத்துகளைப் பரப்பவுமே அதிகம் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான டெலிகிராம் தற்போது இந்தியாவில் பெரும் சட்ட சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் செயலிக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் டெலிகிராம் செயலி குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

Telegram india central govt

குற்றச்சாட்டு

டெலிகிராம் செயலி தற்போது குற்றவாளிகள், இணைய மோசடி பேர்வழிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களின் புகலிடமாக மாறிவிட்டதாகவும், இது ஒரு புதிய டார்க் வெப் போலச் செயல்படுவதாகவும் அரசு கடுமையாகச் சாடியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு மேலும், "டெலிகிராம் செயலி சட்டவிரோதச் செயல்களின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, நீட் போன்ற முக்கியத் தேர்வுத் தாள்கள் கசிவது, இணையவழி நிதி மோசடிகள், பயங்கரவாதப் பிரச்சாரங்கள், சிறார் தொடர்பான ஆபாச விஷயங்கள் பரப்பப்படுவது மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற செயல்களுக்கு இந்தத் தளம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. குற்றவாளிகள் டார்க் வெப் தளங்களுக்கான இணைப்புகளை டெலிகிராம் சேனல்களில் பகிர்ந்து, அதன் மூலம் சட்டவிரோதச் சந்தைகளை அணுகுவதாகவும், இதனால் அவர்களைக் கண்டுபிடிப்பது புலனாய்வு அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.

என்ன சிக்கல்

டெலிகிராம் செயலியில் உள்ள அதீத பிரைவசி அம்சங்களே குற்றவாளிகளைக் கவர்கிறது. பயனர்கள் தங்களின் தொலைப்பேசி எண்கள் மற்றும் அடையாளங்களை மறைத்துக்கொள்ளும் வசதி இருப்பதால், ஒரு கணக்கிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான நபர் யார் என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளது. மேலும், டெலிகிராமின் கட்டமைப்பு சட்ட அமலாக்கத் துறையினருக்குப் பல முட்டுக்கட்டைகளை உருவாக்குகிறது. டெலிகிராமின் வடிவமைப்பு குற்றங்களை தடுக்க ஒத்துழைக்கவில்லை" என்றார்.

இந்தச் செயலியில் உள்ள 'பாட்' (Bot) எனப்படும் தானியங்கி கணக்குகளை உருவாக்கும் வசதி குறித்து அரசு கவலை தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் போன்ற பிற செயலிகளில் இத்தகைய வசதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெலிகிராமில் ஒரு தனிநபர் 40 பாட்களை உருவாக்க முடியும். ஒரு பாட் கணக்கை அதிகாரிகள் முடக்கினாலும், அதே நபர் உடனடியாகப் புதிய பெயர்களில் பல கணக்குகளை உருவாக்கித் தனது சட்டவிரோத செயல்களைத் தொடர முடிகிறது. வேறு எந்த செயலியிலும் இது இல்லை என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

தேசிய பாதுகாப்பு

தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களிலும் டெலிகிராம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அரசு கருதுகிறது. பயங்கரவாத அமைப்புகள் தங்களின் சித்தாந்தங்களைப் பரப்பவும், தவறான தகவல்களைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கவும் டெலிகிராம் சேனல்களை முதன்மையான தளமாகப் பயன்படுத்துகின்றன. மேலும், டெலிகிராமின் கொள்கைப்படி ஒரு கணக்கு டெலிட் செய்யப்பட்டால்.. அதனுடன் தொடர்புடைய அனைத்து டேட்டாவும் அழிந்துவிடும் என்பதால், குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவது புலனாய்வு துறையினருக்குச் சாத்தியமில்லாமல் போகிறது.

மோசடி

மத்திய அரசு சார்பில் மேலும், "இணையக் குற்றங்களைப் பொறுத்தவரை, போலி அடையாளங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்வது, வங்கி டேட்டாவை திருடுவது மற்றும் 'மியூல்' (Mule) எனப்படும் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வங்கி கணக்குகளை விற்பனை செய்வது போன்ற செயல்கள் டெலிகிராமில் தடையின்றி நடக்கின்றன. ஹேக்கர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகள் ஒன்றிணைந்து தாக்குதல்களைத் திட்டமிடவும், திருடப்பட்ட தரவுகளைப் பகிரவும் இந்த தளத்தைப் பயன்படுத்துகின்றனர். சில மால்வேர்கள், டெலிகிராமை பயன்படுத்தி யூசர்களின் டேட்டாவை திருடுகிறது.

மத்திய அரசு வாதம்

மக்களின் தனிப்பட்ட டேட்டாவான ஆதார் விவரங்கள் மற்றும் மொபைல் எண்கள் போன்றவற்றை சட்டவிரோதமாகப் பெற்றுத் தரும் பாட்களும் டெலிகிராமில் இயங்கி வருகின்றன. இது தவிர, சினிமா மற்றும் இணையத் தொடர்களைத் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்யும் தளமாகவும் டெலிகிராம் இருப்பதால், இது அறிவுசார் சொத்துரிமைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, டெலிகிராம் செயலி அதன் தற்போதைய வடிவமைப்பின் காரணமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது" என்று மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+