வேலையைக் குறை கூறவில்லை.. வேலையே செய்யவில்லை என்றுதான் சொல்கிறோம்.. ஈவிகேஎஸ் பொளேர்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேலையே செய்யவில்லை. பலமாக உள்ள கட்சியை பலவீனமாக்கும் வேலையைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். அவர் மாற்றப்பட வேண்டும் என்று முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் யார் தலைவராக இருக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக ஏதாவது ஒரு கோஷ்டி கடுமையாக கொடி பிடிக்கும். இது காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான். ஒற்றுமையாக ஒன்றுபட்டு காங்கிரஸ் தலைமை செயல்பட்டிருந்தால் இன்று மிகப் பெரிய சக்தியாக அது திகழ்ந்திருக்கலாம்.
யார் தலைவராக வந்தாலும் இன்னொரு கோஷ்டி கொடி பிடிப்பது காங்கிரஸில் மட்டுமே. இப்போது அந்த வகையில் இளங்கோவனுக்கும், திருநாவுக்கரசருக்கும் ஏழாம் பொருத்தம். மாறி மாறி அறிக்கை மற்றும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
[மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!]
மாற்றியே தீர வேண்டும்
திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பு ஒற்றைக் காலில் நிற்கிறது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் இதுகுறித்து மேலிடத்திலும் கூறி வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாற்றுக் கட்சி புராணமாக பாடுகிறார்
திருநாவுக்கரசர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து இளங்கோவன் கூறுகையில், எப்போது பார்த்தாலும் மாற்றுக் கட்சித் தலைவர்கள் குறித்தே பேசுகிறார். அதிமுக, அதை விட்டால் பாஜக. இதைத் தவிர வேறு பேசுவதில்லை. காங்கிரஸைப் பற்றிப் பேசுவதே குறைவு. தொண்டர்கள் எப்படி இதை பொறுக்க முடியும்.
வேலை செய்யவில்லை
அவர் வேலையை நாங்கள் குறை சொல்லவில்லை. காரணம், அவர் வேலையே செய்வதில்லை. ஒரு அங்குலம் வேலை கூட நடக்கவில்லை. தான் ஒரு காங்கிரஸ்காரன் என்ற எண்ணமே அவருக்கு இன்னும் வரவில்லை. வந்தால்தானே வேலை செய்ய மனம் வரும்.
கட்சியை பலவீனப்படுத்துகிறார்
அவர் பலமாக உள்ள கட்சியை மேலும் பலமாக்க முயற்சிக்கவில்லை. மாறாக, வலுவாக உள்ள கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் வேலையையே செய்து வருகிறார். இதனால்தான் அவரை நாங்கள் மாற்றக் கோருகிறோம். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, தொண்டர்களின் கோரிக்கையும் கூட. விரைவில் இவரை மாற்றினால் கட்சிக்கு நல்லது என்றார் இளங்கோவன்.