சேர்ந்தே இருப்பது காங்கிரஸும் பஞ்சாயத்தும்..கார்த்தி சிதம்பரம் செஞ்சது துரோகம்.! ஈவிகேஎஸ் ஒரே போடு.!
சென்னை: திமுக இல்லை என்றால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசி இருக்கிறார். மேலும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சிவகங்கை காங்கிரஸ் கட்சியினர் நேராக டெல்லிக்குச் சென்று கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெற முடியாமல் போனது.

அதே நேரத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக நான்காம் இடத்துக்கும் 5ஆம் இடத்துக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர்.
அது மட்டும் அல்லாமல் பல இடங்களில் டெபாசிட் பறிபோனது. இதையடுத்து 2019ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்தித்த பிறகு ஓரளவு எம்பிக்களை பெற முடிந்தது. இந்த நிலையில் தற்போதைய தேர்தலிலும் திமுக ஆதரவு காரணமாகவே காங்கிரஸ் எம்பிக்கள் வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் மக்களைத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை . இந்த கூட்டத்தில் பேசிய செல்வ பெருந்தகை," தமிழகத்தில் எத்தனை நாள் நாம் பிறரை சார்ந்து இருக்க போகிறோம்? சுயமாக வளர வேண்டாமா? மற்ற கட்சிகளை சாராத நிலை இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் தொண்டர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்"என கூறியிருந்தார்.
அப்போது செல்வ பெருந்தகைக்கு அதே மேடையில் வைத்தே பதிலடி கொடுத்தார் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் தற்போதைய ஈரோடு தொகுதி எம்எல்ஏவும் ஆன ஈவிகேஎஸ் இளங்கோவன். இதுதொடர்பாக மேடையில் பேசிய அவர்," இன்றைக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகமும் திமுக தலைவர் மு க ஸ்டாலினும் தான் என்பதை மறந்து விடக்கூடாது. அன்றைக்கு தனித்துப் போட்டியிட்டபோது கன்னியாகுமரியிலும் சிவகங்கை மட்டும்தான் ஒரு லட்சம் வாக்குகள் கிடைத்தது. ஆனாலும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தோம்" என கூறியிருந்தார்.
அப்போதைக்கு இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் காங்கிரஸில் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசி இருக்கும் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன்,"செல்வப் பெருந்தகை, கார்த்தி சிதம்பரத்தின் பேச்சு கூட்டணிக்கு ஊறு விளைவிக்கும் பேச்சாக இருக்கிறது. கண்டிப்பாக கார்த்தி சிதம்பரத்திற்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது தேர்தலுக்கு முன் சிவகங்கை காங்கிரஸ் கட்சிக்காரர்களும் நேரடியாக டெல்லி தலைமைக்கு சென்று கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என்றார்கள்.
ப.சிதம்பரத்திற்காக பல எதிர்ப்பையும் மீறி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க திமுகவினர்தான் அங்கு உழைத்தனர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யாரும் வேலை செய்யவில்லை. அவர்கள் ஓட்டு கூட போட்டார்களா என்பது தெரியவில்லை. கார்த்தி சிதம்பரத்திற்காக திமுகவினர் வேலை செய்யாமல் இருந்திருந்தால் அவர் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது" எனக் கூறியிருக்கிறார். தற்போது இந்த விவகாரம் திமுகவில் காங்கிரஸிலும் மீண்டும் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. செல்வப் பெருந்தகைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே மீண்டும் தனி அணியை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications