எத்தனை பன்னீர் செல்வங்கள் வந்தாலும்.. தலையில் பலாப்பழத்தை சுமந்தபடி அதிரடியாக பேசிய ஓபிஎஸ்
ராமநாதபுரம்: எத்தனை பன்னீர் செல்வங்கள் வந்தாலும் எனக்கு கவலையில்லை என ராமநாதபுரம் லோக்சபா தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் வாக்குக் கேட்பில் ஈடுபட்ட போது அவர் தெரிவித்தார். முதுகுளத்தூர் தொகுதி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தார்.

அந்த நிதியை பெற்றுக் கொண்டு பாஜகவுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசின் துணையுடன் 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி செய்தார். அவரது ஆட்சி 4 ஆண்டுகளும் தொடர் தரை மட்டத்திற்கு சென்று ஆதரித்தேன்.
தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. எனக்கு எதிராக 5 பன்னீர் செல்வங்களை தேடிப்பிடித்து களமிறக்கியுள்ளனர். எத்தனை பன்னீர் செல்வங்கள் போட்டியிட்டாலும் ஜெயலலிதாவின் ஆசியுடன் 3 முதல்வராக இருந்த என்னை மக்களுக்கு நன்றாகத் தெரியும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஓபிஎஸ்ஸின் அதிமுக உரிமை மீட்புக் குழு எனும் அமைப்பு பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் போட்டியிட சொன்ன போது மறுத்த ஓபிஎஸ், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிற்கிறார்.
அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது ஓபிஎஸ் என்ற ஒரே பெயர் இனிஷியலில் 4 பன்னீர் செல்வங்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் எம். பன்னீர் செல்வம் என்ற ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இது ஓபிஎஸ்ஸின் வெற்றியை தடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்த சதி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் மதுரை வாகைக்குளத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாளி சின்னம் ஒதுக்கப்பட்டது.
ராமநாதபுரம் தெற்கு காட்டூரை சேர்ந்த ஒ.பன்னீர் செல்வத்திற்கு கண்ணாடி டம்ளர் சின்னமும் ராமநாதபுரம் கங்கைகொண்டானைச் சேர்ந்த பன்னீர்செல்வத்திற்கு பட்டாணி சின்னமும் , மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஒ.பன்னீர் செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அது போல் எம். பன்னீர் செல்வதற்கு திராட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திராட்சை, பலாப்பழம் உள்ளிட்டவை வாக்குப் பதிவு இயந்திரத்தில் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும் என்பதால் இதிலும் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. எனினும் ஓபிஎஸ்ஸை எல்லாருக்கும் தெரியும் என்பதால் அவருடைய வெற்றி பாதிக்காது என அவருடைய ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications