'பட்டத்து இளவரசர்' உதயநிதியின்.. வெள்ள பாதிப்பு ஃபோட்டோஷூட்டால் மக்கள் அவஸ்தை.. விளாசும் ஜெயக்குமார்
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியைப் பட்டத்து இளவரசர் என விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதியின் வருகைக்காக 4 மணி நேரம் பொதுமக்களுக்கும் போலீசாரும் காக்க வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்,
கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியது. மோட்டரை கொண்டு வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
கோவை மாணவி தற்கொலை செய்த சோகம் மறையவில்லை.. அதற்குள் அமைச்சர் இப்படி செய்யலாமா? ஜெயக்குமார் கேள்வி
தேவையான உதவிகள்
தற்போது தான் வெள்ள பாதிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து சென்னை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல பிரதான அரசியல் கட்சிகள் சார்பிலும் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயக்குமார் தாக்கு
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டசபை உறுப்பினர் உதயநிதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இந்நிலையில், பட்டத்து இளவரசர் உதயநிதிக்காக மக்கள் 4 மணி நேரம் வரை காக்க வைக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பட்டத்து இளவரசர் உதயநிதி
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர், "பசுவின் கன்றைத் தேரோட்டி கொன்ற தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்ற நீதி பிறழா பெருமிதத்துக்குச் சொந்தக்காரர்களான தமிழர் மண்ணில்... பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக கும்மிடிப்பூண்டியில் பாமர மக்களை நான்கு மணி நேரமாகக் காத்திருக்க வைத்ததில் பாவம் அந்த மக்கள்... வெந்த புண்ணில் வேல் பாய்ந்த அவஸ்தைக்கு ஆளானார்கள்.
திமுக போட்டோஷூட்
இரவு ரோந்து பணியைத் தொடர்ந்து இடைவிடாத பாதுகாப்புப் பணிச்சுமை காரணமாகக் காவலர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்... நிவாரணப் பொருட்களை எல்லாம் காட்சிக்கு வைத்து போட்டோஷுட் நடத்தி முடிந்ததும் வண்டியை ஏற்றி திமுகவினர் தாங்களே எடுத்துக் கொண்ட அவலம்.... நூறு நாளில் நீதி தருவதாகச் சொல்லி கோட்டையில் ஆளும் மனு வாங்கிய மன்னன் தரும் விடியல் இதுதானா என்று மக்கள் மனம் குமுறுகிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
— DJayakumar (@offiofDJ) November 17, 2021 |
மயங்கிய போலீஸ்?
அந்த வீடியோவில் கும்மிடிப்பூண்டியில் காலை 9 மணிக்கு நடக்க வேண்டிய நிகழ்ச்சிக்கு உதயநிதி மதியம் 12 மணிக்கு வந்ததாகவும் அதுவரை போலீசாரும் பொதுமக்களும் காக்க வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் மயங்கி விழுந்ததாகவும் அதில் கூறப்படுகிறது. மேலும், நிகழ்ச்சி முடிந்ததும் நிவாரணப் பொருட்களை மக்களுக்குக் கொடுக்காமல் திமுகவினரே எடுத்துச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இருப்பினும், அங்கே என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை.
Recommended Video
திமுக family photo
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டரில் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். முன்னதாக மயிலாடுதுறையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிவாரண பை இருக்கும் படத்தைப் பகிர்ந்த ஜெயக்குமார், "திமுக family photoவுடன் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண பைகள். பாவம் கனிமொழி மட்டும் missing" எனப் பதிவிட்டுள்ளார். அதேநேரம் இந்த நிவாரண பை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டதில்லை, திமுக கட்சி சார்பில் வழங்கப்பட்டதாகவும் சிலர் ட்விட்டரில் விளக்கம் அளித்து வருகின்றனர்.