அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பளீச்
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டணியில் இருந்து விலகியவர்கள் கூறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வென்றன.
இதைத் தொடர்ந்து விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மோசமான தோல்வி அடைந்த அதிமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தேர வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. இதனிடையே அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பான பணிகளும் ஒருபுறம் நடைபெறுகிறது.

அதிமுக உட்கட்சி தேர்தல்
அதிமுக உட்கட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட உட்கட்சி தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளும் அதிமுகவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அதன்படி மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக அமைப்பு தேர்தலுக்காகக் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக்கொண்டார். இதில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிமுக பாமக கூட்டணி
அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளரிடம் பேசினார். அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை என்ற ராமதாஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, "பாமக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. அவர்கள் விலகிய பின் பேசும் கருத்துக்களுக்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும். பாமகவினர் பேசுவதற்கு அதிமுக தலைவர்கள் பதில் சொல்வார்கள்" என்றார்.

மக்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை
மேலும், பாஜக எதிர்க்கட்சி போலச் செயல்பட்டு அடிக்கடி போராட்டங்கள் நடத்துவதாக பாஜகவினர் கூறுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பாஜக வளரும் கட்சி என்பதால் அடிக்கடி போராட்டங்கள் நடத்துகிறார்கள். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது பெரிதல்ல; என்ன காரணத்திற்காகப் போராடுகிறார்கள் என்பதே முக்கியம். எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கிற போராட்டமாக இருக்க வேண்டும். அடிக்கடி போராட்டம் நடத்தி மக்களைத் தொந்தரவு செய்ய அதிமுக விரும்பவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications