போனவாரம் கூட கோபாலபுரம் விசிட் அடித்தாரே.. சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிமுகவில் இணைவதாக பரவும் வதந்தி!
சென்னை: திமுகவில் இருந்தும் தீவிர அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மீண்டும் அதிமுகவில் இணையப் போவதாக நேற்று திடீரென வதந்தி பரவியது. சுப்புலட்சுமி ஜெகதீசன் தரப்பும் இத்தகைய வதந்திகளை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
1970களின் இறுதியில் ஆசிரியராக பணிபுரிந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்ஜிஆர் தலைமை ஏற்ற அதிமுகவில் இணைந்தார். அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் திமுகவில் இணைந்தார். 1990களின் தொடக்கத்தில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த சுப்புலட்சுமி ஜெகதீசன், 2021 சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜகவின் சரஸ்வதியிடம் தோல்வியைத் தழுவினார். உட்கட்சி குழிபறிப்புகளால் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வியை தழுவினார். 2021 தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றிருந்தால் தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார் எனவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தாம் திமுகவில் இருந்தும் தீவிர அரசியலில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் கடிதம் அனுப்பி அறிவித்தது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியது. அப்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் , பாஜக அல்லது அதிமுகவுக்கு போவார் என கூறப்பட்டது. ஆனால் இதனை அப்போதே திட்டவட்டமாகவும் அவர் மறுத்திருந்தார். திமுகவில் இருந்து விலகிய போதும் திராவிடர் கழகம் சார்ந்த நிகழ்ச்சிகள், திராவிட இயக்கம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

சென்னை கோபாலபுரத்துக்கு கடந்த வாரம் சென்றிருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தி இருந்தார். ஈரோடு கீழ்பவானி பிரதான கால்வாய் சீரமைப்பு விவகாரத்திலும் கூட நடவடிக்கை எடுத்ததற்காக "நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகனுக்கு" நன்றி எனவும் தமது சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த ஜூன் 1-ந் தேதி சுப்புலட்சுமி ஜெகதீசன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில்தான் நேற்று திடீரென அண்ணா திமுகவில் இணைய இருக்கிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன் என ஒரு தகவல் காட்டுத் தீயாக பரவியது. சமூக வலைதளங்களிலும் இத்தகவல் பரப்பிவிடப்பட்டது. ஆனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் தரப்பு இதனை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications