117.6 ஏக்கர்..ரூ.206 கோடி.. கைவிட்ட "மேலிடம்".. டெல்லிக்கு எதிராக விஜயபாஸ்கர் முக்கிய மூவ்.. "மோதல்"
சென்னை: வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார் அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழ்நாட்டில் எல்லா பக்கங்களில் இருந்தும் கடும் பிரஷரை சந்தித்து வரும் மாஜி அமைச்சர் என்றால் அது விஜயபாஸ்கர்தான். அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு உள்ளது.
இரண்டு ரெய்டுகளை நடத்தி, இரண்டு விதமான வழக்குகளை பதிவு செய்துள்ளது. இன்னொரு பக்கம் இவருக்கு எதிராக ஜெயலலிதா மரண வழக்கிலும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த ரிப்போர்ட் கொடுத்து உள்ளது.

ரெய்டு
இது போக குட்கா வழக்கிலும் சிபிஐ இவருக்கு எதிராக இரண்டாவது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் விஜயபாஸ்கர் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது வருமானவரித்துறைக்கு எதிராக விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வருமான வரித்துறை சார்பாக கடந்த ஏப்ரல் 7ம் தேதி 2017 அன்று விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இவருக்கு சொந்தமான குவாரிகளில் அளவுக்கு அதிகமான கற்கள் எடுக்கப்பட்டதாகவும், ஆனால் குறையாக கற்கள் எடுத்ததாக கணக்கு காட்டி, அளவிற்கு அதிகமாக எடுக்கப்பட்ட கற்களுக்கு வரி கட்டவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டது. இதற்காக டிரோன் மூலம் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருமான வரித்துறை வழக்கும் பதிவு செய்தது. அதேபோல் ஆர். கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

வழக்கு
இந்த வழக்கில்தான் வருமான வரித்துறை இவரின் சொத்துக்களை முடக்கியது. 117.46 ஏக்கர் நிலங்களை முடக்கியது. புதுக்கோட்டையில் உள்ள நிலங்கள் ஆகும் இவை, அதேபோல் இவரின் வங்கி கணக்குகளையும் முடக்கியது. இதன் மூலம் 206.42 கோடி ரூபாய் வருமான வரித்துறையுடன் இணைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக விஜயபாஸ்கர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். நேற்று மாலை நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்ததில். இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரித்துறை
இந்த மனுவில் விஜயபாஸ்கர் தரப்பு, என் மீதான புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ரெய்டின் போது எனக்கு எதிராக எந்த விதமான ஆதாரங்களும் கைப்பற்றப்படவில்லை. ஒரு சில ஆதாரமற்ற பேப்பர்கள், சில வாக்கு மூலங்களின் அடிப்படையில் எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்த்துள்ளனர். அவசர அவசரமாக எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். என்னுடைய 4 வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். எம்எல்ஏ வருமானம் வர கூடிய வங்கி கணக்கையும் முடக்கி உள்ளனர். இதனால் தற்போது என்னால் என்னுடைய தொகுதிக்கு செலவு செய்ய முடியவில்லை. என் தொகுதி பணம் மற்றும் வருமானம் இரண்டும் முடக்கப்பட்டு உள்ளது.

வருமானம்
எம்எல்ஏ வருமானம் மட்டுமின்றி விவசாயம், குவாரி மூலம் வரும் வருமானமும் முடங்கி உள்ளது. இதனால் உடனடியாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்து உள்ளார். இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இன்னொரு பக்கம் குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று குட்கா வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

விஜயபாஸ்கர் வழக்கு
இதில் விஜயபாஸ்கர் பெயரும் இடம்பெற்று உள்ளது. ஏற்கனவே 2019க்கு முன் இதில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நேற்று முதல்நாள்தான் டெல்லி சென்ற விஜயபாஸ்கர் பாஜக தலைவர்களை சந்தித்தார். இதையடுத்தே விஜயபாஸ்கர் சமீபத்தில் டெல்லி சென்று பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவையும், மத்திய அமைச்சர் முருகனையும் சந்தித்து பேசினார். இது குறித்து எடப்படியிடம் விவரித்திருக்கிறார் விஜயபாஸ்கர். மாஜிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஏகப்பட்ட சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்றே சி.பி.ஐ. தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கேட்பதற்காகத் தான் நட்டாவையும் முருகனையும் சந்தித்துள்ளார் விஜயபாஸ்கர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

டெல்லி பிரஷர்
இதை பற்றி பேசவே அவர் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. ஆனால் அங்கே அவருக்கு சாதகமான பதில்கள் வரவில்லை என்கிறார்கள். அதோடு டெல்லியில் இருந்து அவர் திரும்பி வந்த கையோடு தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டார். குட்கா வழக்கில் டெல்லியில் இருந்து அவருக்கு சாதகமான பதிலால் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது வருமான வரித்துறை வழக்கில் விஜயபாஸ்கர் சட்ட போராட்டத்தை தொடங்கி இருக்கிறார். தனக்கு சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் டெல்லிக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டத்தை தொடங்கி உள்ளார் என்கிறார்கள் விஜயசுபாஸ்கருக்கு நெருக்கமான நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications