ஆட்டம் காணும் அதிமுக.. ஆவேசமான ஆறுகுட்டி.. சசிகலா, தினகரன் தலைமை தேவை என்று போர்க்கொடி!
சென்னை: அதிமுகவின் தற்போதைய தலைமை சரியில்லாததால்தான் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது; அதிமுகவுக்கு சசிகலா அல்லது டிடிவி தினகரன் தலைமை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான ஆறுகுட்டி வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனையடுத்து அதிமுகவில் மீண்டும் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

தேனி தீர்மானம்
தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிமுக நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்திருந்தார்.

அதிமுகவில் மீண்டும் கலகம்
அத்துடன் தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்டங்களில் இதேபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, மீண்டும் சசிகலா, டிடிவி தினகரனை சேர்த்தாக வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளது. ஆனால் இதனை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் அதிமுக மீண்டும் பிளவுபடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஆறுகுட்டி பேட்டி
இந்நிலையில் கோவை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுகுட்டி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஆறுகுட்டி கூறியதாவது: 4 ஆண்டுகளுக்கு முன்னரே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி இருந்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றிருக்கும். இப்போதைய அதிமுக தலைமை சரியில்லாததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர்கள் சொந்த காசை செலவு செய்து இப்போது தோல்வியைத் தழுவி உள்ளனர்.

சசிகலா, தினகரனை சேர்க்க வேண்டும்
சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலமும் அதிமுகவை விட்டு போய்விட்டது. அதிமுகவுக்கு சசிகலா அல்லது டிடிவி தினகரன் தலைமை ஏற்றால்தான் வலிமை பெற முடியும். ஆகையால் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும். என் தனிப்பட்ட நலனுக்காக இதனை சொல்லவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு இணைந்தால் மட்டுமே அதிமுக மீண்டு எழும். இல்லை எனில் அதிமுக காணாமலேயே போய்விடும். அதிமுகவின் நலன் கருதியே இதனை தெரிவிக்கிறேன். இவ்வாறு ஆறுகுட்டி கூறினார்.












Click it and Unblock the Notifications