சர்க்கரை கார்டுதாரர்களுக்கு ஹேப்பி.. ரேஷனில் வருகிறது புது மாற்றம்! ரேஷன் கடைகளில் தமிழக அரசு அதிரடி
சென்னை: ரேஷன் பொருட்களுக்கான விநியோகம் முழுமையாக நடைபெறாத நிலையில், அதுகுறித்து சில அதிரடிகளை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.. இதனால், கோடானு கோடி மக்கள் நேரடியாகவே பலனை பெறுகிறார்கள்.

இந்நிலையில், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எனவே, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிககப்பட்டுள்ளது.
பாமாயில்: அதுமட்டுமல்ல, இந்த மாதத்திற்கான கொள்முதல் தாமதமாகவே துவங்கியதால், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு உரிய பொருட்கள் இன்னும் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்படாமலேயே உள்ளது.. எனவே, பருப்பு, பாமாயில் வாங்காமலேயே நிறைய பேர் இருப்பதால், அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. அதனால்தான், இன்று ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பணி நாளாக அறிவித்து உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து ரேஷன் கடைகளுக்கும், இன்று 26ம் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கு ஈடான விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதிரடி: அதேபோல, இன்னொரு அதிரடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. ரேஷன் பொருட்களை, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கின்றன.. பெரும்பாலான ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்களே நடத்தி வருகின்றன.. இதில், ரேஷன் பொருட்களை கடையில் இறக்கும் போது, ஒரு மூட்டைக்கு 2 - 3 கிலோ வரை குறைவாக இருப்பதாக, ரேஷன் ஊழியர்கள் புகார் சொல்கிறார்களாம்.
அதனால், ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, அவற்றை ஏற்றிச்செல்லும் வாகனங்களில், GPS (ஜி.பி.எஸ்.) என்ற வாகன நகர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளதாம்..
கண்காணிப்பு: இப்படி ஜிபிஎஸ் கருவி பொருத்துவதால், வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்வதை கண்காணிப்பதுடன், வாகனங்கள் செல்லும் நேரத்தையும் அறிய முடியும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, அனுமதித்த நேரத்தை விட தாமதமானால், அதற்கான காரணம் கேட்டு நடவடிக்கையிம் எடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. எனவே, வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு, ஜூன் இறுதிக்குள் கருவிகள் பொருத்தப்படும் என்று கூட்டுறவு துறை தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications