EXCLUSIVE: டாஸ்மாக்குல கூட்டம் கூடலயா.. அதைமட்டும் வேணும்னே அனுமதிச்சா எப்படி: அர்ஜூன்சம்பத் கேள்வி
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி தந்துள்ளார்
சென்னை: "கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் விழாக்களுக்கு மட்டும் அனுமதி தர்றீங்க.. எங்களுக்கு ஏன் தர்றது இல்லை? டாஸ்மாக்குல கூட்டம் கூடலையா? விநாயகர் விழா நடத்தக்கூடிய இந்த நேரத்துல, சாராயக்கடையை வேணும்னே அனுமதிச்சால் எப்படி?" என்று இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
வழக்கமாக விநாயகர் சிலைகள் வழிபாடு உற்சாகமாக நடக்கும்.. ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்து தமிழக அரசு, உத்தரவிட்டது.
இந்த உத்தரவை சென்னை ஹைகோர்ட்டும் நேற்று உறுதி செய்தது. அத்துடன் விநாயகர் சிலையை அமைப்பாகவோ, குழுவாகவோ அல்லாமல் தனி நபராக சென்று கரைக்கலாம் என்றும் கோர்ட் அனுமதி தந்தது.
இந்த குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் என்ன சொல்கிறார் என அவரிடம் கருத்து கேட்க முயன்றோம்.. இதை தவிர இன்னபிற கேள்விகளையும் அவரிடமே முன்வைத்தோம்.. "ஒன் இந்தியா தமிழ்" வாசகர்களுக்கு அவர் அளித்த பேட்டி இதோ:
தனிநபராக சென்று விநாயகர் சிலையை கரைக்கலாம்னு கோர்ட் உத்தரவிட்டிருக்கே.. இதை பற்றி என்ன நினைக்கிறீங்க?
முதல்ல அரசாங்கமே இப்படி ஒருதலைப்பட்சமா உத்தரவை போட்டுக்கிட்டு விநாயகர் விழாவே கூடாதுன்னு சொல்ல கூடாது... அதனாலதான் நாங்க 5-ம்தேதி முதல்வரை சந்தித்து பேசினோம்.. "கொரோனா சூழல் என்பதால் ஒத்துழைப்பு தருகிறோம், 10 நாள் விழா எல்லாம் செய்ய மாட்டோம்.. ஒருநாள்தான் நடத்துவோம்" என்று எங்கள் தரப்பில் சொன்னோம். முதல்வரும் அதிகாரிகள் தரப்பில் பேசிவிட்டு சொல்வதாக கூறினார்.. அதன்படியே பேசவும் செய்தார்... ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.. இப்போது வந்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம்.. அரசு விதிகளுக்கு உட்பட்டு, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல், உத்தரவையும் மதித்து விழாவை நடத்தறோம்.
இது சம்பந்தமா தமிழக அரசுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
ஒன்னே ஒன்னுதான்.. விநாயகர் சிலை அமைப்பாளர்களும், பக்தர்களும் ஒன்றும் நக்சலைட்டுகளோ, போராட்டக்காரர்களோ கிடையாது.. அதேசமயத்தில் அரசுடன் மோதல் போக்கையும் கடைப்பிடிக்க விரும்பல.. நாங்க சட்டத்தை மதிக்கிறோம். ஆனால், வருங்காலத்தில் அரசுக்கு நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.. சிறுபான்மையிருக்கு அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தக்கூடிய விழாக்களுக்கு அனுமதி தர்றீங்க.. ஒரு அளவுகோல் வெச்சிருக்கீங்க.. அந்த விழாக்களுக்கு அவங்களுக்கு உதவி செய்றீங்க.
அது நாகூரில் நடக்கக்கூடிய சந்தனகூடு விழாவாக இருக்கலாம்.. தூத்துக்குடியில் நடக்கக்கூடிய பனிமயமாதா விழாவாக இருக்கலாம்.. இதுக்கெல்லாம் நேரிலே போய், கொரோனா காலத்திலும் அனுமதி தந்து நடத்தறீங்க.. ஆனால், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு மட்டும் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கறீங்க? உங்களுக்கு டாஸ்மாக்குல கூட்டம் கூடலையா? விநாயகர் விழா நடத்தக்கூடிய இந்த நேரத்துல, சாராயக்கடையை வேணும்னே அனுமதிச்சால் எப்படி? சாராயக்கடை திறக்க எத்தனை திட்டமிடல்கள், எத்தனை முன்னேற்பாடுகள் நடக்குது.. அதனால், இனி வரும் காலங்களில் இந்து விழாக்களையும் பரிசீலிக்கணும்.. இது என் வேண்டுகோள்.
சினிமாவெல்லாம் பார்க்கிற பழக்கம் இருக்கா?
நிறைய பார்ப்பேன்.. சின்ன வயசிலே இருந்தே நிறைய படங்கள் பார்ப்பேன்.. நான் ஒரு தீவிரமான சிவாஜி கணேசன் ரசிகன்.. கமல்ஹாசன் ரசிகன்... நிறைய புக் படிப்பேன்.. இலக்கிய ஆர்வம் நிறைய இருக்கு. நல்லா பாட்டும் பாடுவேன்.
ரஜினி மீது எப்பவுமே உங்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கே? அவர்தான் அடுத்த முதல்வர் என்று நீங்க மட்டும் விடாம சொல்லிட்டே இருக்கீங்களே? அவர்கிட்ட அப்படி என்ன பிடிச்சிருக்கு?
அவர் கருத்தும் கொள்கையும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. முக்கியமா ஆன்மீக அரசியல் என்று அறிவித்ததில் இருந்தே அவர் மீது ஈர்ப்பு அதிகமாகிவிட்டது.. ஆன்மீக அரசியலுக்கு சாதி, மதம் கிடையாது.. நம்முடைய தேசிய கலாச்சாரத்தில், பாரதீய பண்பாட்டில்தான் ஆன்மீகம் இருக்கு.. நம்முடையது சனாதன தர்மம்.. ஆன்மீக அரசியல் என்பது பதவியை பிடிப்பது இல்லை. பற்றற்ற தன்மைதான் ஆன்மீக அரசியல்.
அதிகார வெறி கூடாது என்றுதான் ரஜினி சொல்றார்.. தான் முதல்வர் ஆவேன் என்று அவர் சொல்லவில்லை.. அவன் நினைச்சிருந்தால், எப்பவோ முதல்வர் ஆகியிருக்கலாம்.. இப்போ ஒரு ஆட்சி மாற்றம் வேணும்னு விரும்பறார்.. இப்ப கொண்டு வரலேன்னா எப்பவுமே மாற்றம் கொண்டு வர முடியாதுன்னு நினைக்கிறார்... எல்லா விஷயங்களையும் உள்வாங்கிட்டு இருக்கார்.. உன்னிப்பா கவனிச்சிட்டு இருக்கார்.. கொரோனா தாக்கம் தமிழகத்தில் உள்ளதால், கட்சி தொடங்குவதில் 2, 3 மாதங்கள் லேட் ஆகும்.. அவ்வளவுதான்.. நிச்சயம் ஆட்சி மாற்றத்தை அவர்தான் தருவார்.
ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவருடன் நீங்கள் சேருவீங்களா?
நிச்சயமா.. ஆன்மீக அரசியலை சேர்ந்து செய்வோம்... அவருக்கு பக்கபலமா இந்து மக்கள் கட்சி துணை இருக்கும்... ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உண்டு பண்ணுவோம்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி சாந்தோம் சர்ச்-க்கு ஏன் போனீங்க.. ரொம்ப பரபரப்பா பேசப்பட்டதே?
அங்க தான் கபாலீஸ்வரர் திருக்கோயில் அங்கதான் இருந்தது.. ஞானசம்பந்தர் பாடம் கற்ற ஸ்தலம் அது.. 16-ம் நூற்றாண்டில், போர்ச்சுக்கல்காரர்கள் அந்த கோயிலை இடிச்சிட்டு சர்ச் கட்டிட்டாங்க.. பிரெஞ்சுக்காரர்கள் இங்கே கிறிஸ்தவ மதத்தை பரப்பினபோது, இப்படி ஒரு காரியத்தை செய்திருக்காங்க. இதுக்கான டைரி குறிப்புகள் நிறைய இருக்கு. 30 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும்கூட, அந்த கொடி மரத்து முன்னாடி நடராஜர் சிலை இருந்திருக்கு.. இப்பதான் அகற்றிட்டாங்க.. அதுக்கான வரலாற்று குறிப்புகள் சென்னை மியூசியத்தில் இருக்கு.
தாமஸ் இங்கே வந்தாரு, தாமஸ் கல்லறை இங்கே இருக்குன்னு சொல்றாங்க.. அதெல்லாம் தவறான செய்தி. தாமஸ்-க்கு கல்லறையே இங்கே கிடையாது.. அது ஐரோப்பிய நாட்டில் இருக்கு... இதை போப் ஒத்துக்கல... தாமஸ் பற்றின தகவல்கள், அவர் உடம்பில் குத்தப்பட்ட ஈட்டி, இன்னபிற பொருட்கள் அங்கே மியூசியத்தில் வெச்சிருக்காங்க.. ஆனால், எந்த ஆய்விலும் அவைகள் உறுதி செய்யப்படவில்லை... பொய்யான வரலாறு நிறைய இருக்கு.. தமிழர் கலாச்சாரத்தை சிதைச்சிட்டாங்க... இன்னைக்கும் அந்த சர்ச்-க்கு கீழே நிறைய சிவலிங்கம், கோயிலின் இடிபாடுகள் இருக்கும்... அன்னைக்கு நான் சர்ச்சுக்கு போனபோதுகூட, வரலாற்று குறிப்புகள் விஷயமா மியூசத்தை பார்க்கணும்னு சொன்னேன்.. அவங்களும் அதுக்கு எந்த மறுப்பும் சொல்லல. நான் போய் பார்த்துட்டு வந்தேன்.
எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமா இருக்கே?
ஆமா.. ரொம்ப வருத்தமாவும் இருக்கு.. எனக்கு அவர் பாட்டுன்னா ரொம்ப உயிர்.. பாடு நிலா பாடுன்னாலே சின்ன வயசல இருந்தே ரொம்ப பிடிக்கும்.. அவரை நான் முதன்முதலா கோயம்புத்தூர் ஜெயில்லதான் பார்த்தேன்.. கோவை குண்டுவெடிப்பு தொடர்பு வழக்கில் இரண்டரை வருஷமா நான் ஜெயிலில் இருந்தேன்.. அப்போ சிறை கைதிகளுக்காக பாட்டு பாட வந்தார்... "வான் நிலா நிலா" பாட்டு பாடினார்.. உடனே கைதிகள் நாங்க எல்லாம் சேர்ந்து ஒரு பகவத்கீதை புக் அவருக்கு பரிசா தந்தோம்.. அதுக்கப்பறம் நிறைய முறை அவரை சந்திச்சு பேசியிருக்கேன்.. மிகச்சிறந்த மனிதநேயம் மிக்கவர்.. அவர் உடல்நலம் தேறி சீக்கிரமா வரணும்.. அவருக்காக நடந்த கூட்டு பிரார்த்தனையில் நானும் கலந்துக்கிட்டேன்" என்றார்.