'தாவிய நிர்வாகிகள்' .. சட்டென மாறிய காட்சிகள்.. கொதிப்பில் திமுக உடன்பிறப்புகள்
சென்னை: நிலைமாறும் உலகில்.. நிலைக்கும் என்ற கனவில், 10 வருடம் பதவியில் இருந்து சுகபோகமாக வாழ்ந்த தலைவர்கள் திடீரென இன்று பதவி இல்லை என்ற உடனேயே கட்சியின கரைவேட்டிகளை மாற்றிக்கொண்டு ஆளும் கட்சிக்கு தாவ தொடங்கிவிட்டார்கள்.
குறிப்பாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் திமுகவில் சேர துண்டுபோட்டு இடம் பிடிப்பதில் போட்டியே நடக்கிறது. அதிமுகவில் இருந்த விலகி திமுகவில் இணைந்த பலர் வளமான பதவிகளை பெற வேண்டும் எனகாய் நகர்த்துகிறார்கள். இவர்களின் செயலால் காலம் காலமாக உள்ள திமுக உடன்பிறப்புகள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்றாலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கட்சி தாவல் என்ற காட்சி அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக அதிமுகவில் இருந்து ஏராளமானோர் ஆளும் திமுகவிற்கு தாவி வருவது உள்ளூர் திமுக உடன்பிறப்புகளை கொதிப்படைய வைத்தள்ளது.

பறிபோகிறது
பலரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்பட வளமான பதவிகளை கைப்பற்றும் நோக்கிலும், பல்வேறு இடங்களில் வேட்பாளராககளம் இறங்கலாம் என்ற ஆசையுடன் காய் நகர்த்தி உள்ளே வருவதால் உள்ளூர் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வளவு நாளாக உழைத்து கஷ்டப்பட்ட தங்களுக்கு , அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினரின் வருகை தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

குமுறல்கள்
ஒருவேளை இப்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் இடம் கிடைக்காவிட்டாலும், விரைவில் நடைபெற போகின்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளை கைப்பற்றும் நோக்கில் திமுகவிற்கு பலர் வருகிறார்கள். இப்படி வருபவர்களின் எண்ணிக்கை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகமாக உள்ளதாக குமுறல்கள் வெளிப்படுகிறது.

விஜிலா சத்யானந்த்
நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க-வில் எம்.பி-க்களாக இருந்த விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் திமுகவில் அண்மையில் ஐக்கியமானார்கள். அதேபோல் அ.ம.மு.க-விலிருந்து வந்த பரமசிவ ஐயப்பனும் திமுகவில் சேர்ந்தார்,. இவர்கள் வந்த வேகத்தில், தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதாக் கருதும் திமுக உடன்பிறப்புகள் கோபம் அடைந்துள்ளனர். மாவட்டப் பஞ்சாயத்து தலைவர்அல்லது அடுத்து நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மேயர் பதவியைக் குறிவைத்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதான் திமுகவினரின் குமுறலுக்கு காரணமாம்.

திமுக நிர்வாகிகள்
நேற்று வந்தவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுக்காமல் கட்சியின் விசுவாசிகளை ஆதரித்து தூக்கிவிட வேண்டும் என்ற குரல் நெல்லை, தென்காசி மட்டுமல்ல, மதுரை, கோவை, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகமாக எதிரொலிக்கிறது. நீண்டகாலமாகக் கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகள் மனமுடைந்துவிடுவார்கள் என்ற குமுறுகிறார்கள் திமுக நிர்வாகிகள்.

கோபம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பணம் அதிகம் வைத்துள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யாமல் கட்சிக்காக உழைத்தவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் திமுக நிர்வாகிகள் தரப்பில் இருந்து அதிகரித்துள்ளது. தங்களது கோரிக்கைகளை கட்சி மேலித்திற்கு கொண்டு சேர்க்கும் முடிவில் இருக்கிறார்கள். அதிமுக அல்லது அமமுகவில் இருந்து வந்தவர்களுக்கு வலுவான பதவி ஊரக உள்ளாட்சி தேர்தலிலோ அல்லது நகராட்சி தேர்தலிலோ கிடைத்தால் உள்ளூர் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைவார்கள் என்பது உண்மை என்கிறார்கள் நீண்ட கால திமுக உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications