இது ‛கள்ளக்கூட்டணி’.. பாஜக-அதிமுகவை ஒற்றை வார்த்தையில் விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. பரபர அட்டாக்
சென்னை: அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி என்பது முறிந்துள்ளது. இந்நிலையில் தான் கள்ளக்கூட்டணியில் இருக்கும் அதிமுகவும், பாஜகவும் வலைதளங்களில் கூலிக்கு ஆட்கள் வைத்து பொய்களை பரப்பி வருகிறது என ட்விட்டர் ஸ்பேஸில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கொந்தளித்தார்.
திமுக சார்பில் திராவிட மாதம் என்பது செப்டம்பரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக திமுக திராவிட மாத கொண்டாட்டத்தை கொண்டாடி வந்தது. திமுக ஐடி விங்க் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எக்ஸ் ஸ்பேஸ் (முன்பு ட்விட்டர் ஸ்பேஸ்) கலந்துரையாடலில் திமுக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் தான் திராவிட மாத கொண்டாட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், திமுக தோன்றிய நாள் என முப்பெரும் விழாவை செப்டம்பர் மாதத்தில் கொண்டாடி வருகிறோம். திமுக என்பது தனது கொள்கைகளை பரப்ப பேச்சு, நாடகம், எழுத்துலகம், பாட்டு, கவிதை, கதை, நாடகம், நாளிதழ், வார இதழ், மாத இதழ் என அனைத்தையும் பயன்படுத்தி வருகிறது. முரசொலி பொங்கல் மலர் கருத்துகள் நிறைந்து இருக்கும்.
கரிக்கட்டையை வைத்து சூரியன் வரைந்து கட்சியை சாதாரணமானவர்கள் வளர்த்தனர். கரிக்கட்டையை கூட கருத்தியல் ஆயுதமாக பயன்படுத்த தெரிந்தவர்கள் தான் திமுக காரர்கள். சமூக வலைதளங்கள் உள்ளதால் தற்போது பெரிய பெரிய மாநாடு நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பேஸ்புகள், யூடியூப், வாட்ஸ்அப், டெலிகிராம் உள்பட பல வலைதளங்கள் வாயிலாக கொள்கைகளை கொண்டு சேர்க்க வேண்டும்.
மக்களை திசைதிருப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும். ஐடி விங்க்கின் பலரது பதிவுகளை ரசித்து படிப்பேன். குறைகளை கூறினால் தீர்க்கவும் முயற்சி செய்கிறேன். உங்களுடன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பாக நான் வலைதளத்தை பார்க்கிறேன். இந்த வலைதளங்கள் வாயிலாக நம் கொள்கைகளை கூற வேண்டும்.
வலைதளங்களில் அதிமுக பாஜக பொய் செய்திகளை பரப்புவதற்காகவே வேலைக்கும், கூலிக்கும் ஆட்களை வைத்துள்ளனர். அதிமுகவுக்கு கொள்கை இல்லை. கொள்கை சார்ந்த விஷயம் இல்லை. கள்ள கூட்டணியில் உள்ள கூட்டணியில் உள்ள இவர்கள் பரப்பும் பொய்களுக்கு ஆயுள் குறைவு. நமது கொள்கைக்கு ஆயுள் அதிகம். இதனால் தான் 6வது முறையாக ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் தொடர்ந்து கொள்கைகளை பரப்ப வேண்டும். இதை செய்தால் 40ம் நமதே நாடு நமதே என வசப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications