திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அதிர்ச்சி! பாஸ்டேக் குளறுபடியால் அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தம்
சென்னை: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் பாஸ்டேக்கில் பணம் இல்லாத காரணத்தால் அரசுப் பேருந்துகள் நேற்று காலை வரிசையாக சிறைபிடிக்கப்பட்டன.. மத்திய அரசின் புதிய உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இதனால் பணிக்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். பாஸ்டேக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் வரிசையாக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்ட சம்பவம் பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் உத்தரவுப்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் மின்னணு அட்டை மூலமாக மட்டுமே சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்தன.

பாஸ்டேக்கில் பணமில்லை
இந்தச் சூழலில், நேற்று காலை திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி வழியாகச் சென்ற அரசுப் பேருந்துகளை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
குறிப்பாக, மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற 2 பேருந்துகள், ஏர்வாடி தர்கா சென்ற ஒரு பேருந்து, பரமக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ஒரு பேருந்து மற்றும் வாகுடி சென்ற ஒரு நகரப் பேருந்து என அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பாஸ்டேக்கில் பணம் இல்லை என்ற காரணத்திற்காகச் சிறைபிடிக்கப்பட்டன.
167 அரசு பேருந்துகள்
தினசரி இந்த வழித்தடத்தில் சுமார் 167 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாகப் பழுதடைந்த பேருந்துகளுக்குப் பதிலாக இயக்கப்படும் மாற்றுப் பேருந்துகளில் பாஸ்டேக் வசதி இல்லாவிட்டாலும், ரொக்கமாகப் பணம் பெற்றுக்கொண்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிப்பது வழக்கம். ஆனால், நேற்று இந்த விதிமுறையைக் கடுமையாகப் பின்பற்றிய ஊழியர்கள், பேருந்துகளை அனுமதிக்க மறுத்ததால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காலை நேரத்தில் அலுவலகம் மற்றும் அவசர வேலைகளுக்குச் சென்ற பயணிகள், நீண்ட நேரம் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் நடுவழியில் தவித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, வேறு வழியின்றி ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பேருந்துகள் செல்ல சுங்கச்சாவடி நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்த சம்பவம் குறித்துச் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரப்பில் சொல்லும்போது, "ஏப்ரல் 1 முதல் பாஸ்டேக் கட்டாயம் என்பது குறித்து அனைத்துப் போக்குவரத்துப் பணிமனை மேலாளர்களுக்கும் முன்னரே கடிதம் அனுப்பிவிட்டோம். இருந்தாலும் உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்று தெரிவித்தனர்.
பாஸ்டேக் ஸ்டிக்கர்கள்
ஆனால் அதே சமயம், அரசு பேருந்து ஊழியர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு வேறு விதமாக உள்ளது. விபத்தில் சிக்கி கண்ணாடிகள் மாற்றப்படும் பேருந்துகளில், பழைய கண்ணாடியில் இருந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்களை எடுத்துப் புதிய கண்ணாடியில் ஒட்டுகிறார்களாம். இதனால் ஸ்கேனர் கருவியால் அவற்றைச் சரியாக அடையாளம் காண முடிவதில்லை.
பாஸ்டேக் கணக்கில் பணம் இருந்தும் தொழில்நுட்பக் கோளாறால் பணம் எடுக்க முடியாமல் போகிறது. நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளே இந்தத் தேவையற்ற வாக்குவாதங்களுக்குக் காரணமாகின்றன என அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.. திருப்பாச்சேத்தி பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications