அசாத்திய தேசபக்தர்..அச்சமற்ற புரட்சியாளர், சமூக நீதி வீரர் சாவர்க்கர்.. ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர், அசாத்திய தேசபக்தர்கள் என்றும் அச்சமற்ற புரட்சியாளர் என்றும் சமூக நீதிக்கான வீரர் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் செலுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாவது: சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்களின் புண்ணிய திதியில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். அசாத்திய தேசபக்தர், அச்சமற்ற புரட்சியாளர் மற்றும் ஆழ்ந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அவர், மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை மற்றும் ரத்னகிரியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொணா கொடுமைகள் மற்றும் சித்ரவதைகளை அனுபவித்தார். ஒரு சிறந்த தேசியவாதியாக, பிரிட்டிஷ் ஆளுகை எதிர்ப்புணர்வுத் தீயை மூட்டி எண்ணற்ற சுதந்திரப் போராளிகளை ஊக்கப்படுத்தினார். சமூக நீதியின் சிறந்த வீரராக அவர் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிராக அயராது போராடி, ஏராளமான சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக விளங்கினார். போற்றுதலுக்குரிய பாரம்பரியத்தில் ஊறிப்போன நம்பிக்கை, பெருமை மற்றும் முற்போக்கான பாரதத்தை ஊக்குவிக்கும் வகையில் அவரது நீடித்த மரபு வழிகாட்டும் சக்தியாக தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
வீரத்திற்கும், தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், அமரர் சாவர்க்கர் நினைவு தினமான இன்று,
தமிழ்நாடு பாஜக சார்பாக அஞ்சலி செலுத்திக் கொள்கிறோம். தாய்நாட்டின் விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அவரது தியாகத்தினைப் போற்றி வணங்குகிறோம்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
விடுதலை போராட்ட வீரரும், எண்ணற்ற பாரதப் புரட்சியாளர்களின் வழிகாட்டியும், ஹிந்துத்வாவின் பிதாமகருமான வீர சாவர்க்கர் அவர்களின் நினைவு தினத்தில் "வந்தால் உங்களோடு வராவிட்டால் நீங்கள் இல்லாமல் எதிர்த்தால் உங்களையும் மீறி" என தேசத்திற்காக மட்டுமே வாழ்ந்து மறைந்த பரிபூரண தேசபக்தரான அவரின் மகத்தான சேவைகளையும், தியாகங்களையும் அவரது நினைவு தினத்தில் போற்றி வணங்குவோம்.












Click it and Unblock the Notifications