பெண் காவலர்கள் பற்றி அவதூறு.. சவுக்கு சங்கரின் வீடியோ வெளியிட்ட யூடியூப் நிறுவனம் மன்னிப்பு கேட்டது
சென்னை: பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனத்தின் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சவுக்கு சங்கரின் வீடியோவை ஒளிபரப்பியது தொடர்பாக அவரது யூடியூப் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறு வகையில் கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த சவுக்கு சங்கரை கடந்த 4ம் தேதி தேனியில் கைது செய்தனர். தற்போது சவுக்கு சங்கர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.

இதற்கிடையே தான் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையில் கருத்தை கூறியுள் அதனை ஒளிபரப்பு செய்ததாக ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் நடத்தி வரும் யூடியூப் நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். போலீசாரிடம், ‛‛நீங்கள் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்துவிட்டு சென்றுவிட்டால் என்ன செய்வது?'' எனக்கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் போலீசார் நீதிமன்ற உத்தரவை காட்டி சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தான் இன்று ஃபெலிக்ஸ் ஜெரால்டு நடத்தி வரும் யூடியூப் சேனல் சார்பில் பெண் காவலர்கள் பற்றி சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை வெளியிட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது 'ரெட் பிக்ஸ்' ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார்.
அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது. சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் பிரைவேட் செய்யப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் மனைவியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிறையில் உள்ள தனது கணவர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை வக்கீல்கள் சந்தித்தனர். அப்போது அவர் சவுக்கு சங்கரின் வீடியோ வெளியிட்டது டர்பாக மன்னிப்பு கேட்கும்படி கூறி மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பெண் காவலர்கள் பற்றி சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை வெளியிட்டதற்காக ஃபெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications