"இப்படியெல்லாம் செய்யாதீங்க.. கஷ்டமா இருக்கு.. கண் கலங்குது".. ஸ்டாலினை பதற வைத்த பரமக்குடி வனிதா
நாக்கை வெட்டி கொண்ட பெண் தொண்டருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர், முதல்வராக பதவியேற்பதை ஒட்டி, வனிதா என்ற பெண் தொண்டர் ஒருவர் கோயிலுக்கு சென்று நாக்கை துண்டித்து காணிக்கையாக செலுத்திய சம்பவத்துக்கு முக ஸ்டாலின் தன்னுடைய வருத்தத்தையும், அத்துடன் தொண்டர்களுக்கு ஒரு கண்டிப்பு நிறைந்த கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 10 வருடம் ஆட்சியை இழந்துள்ளது திமுக.. நூலிழையில் தவற விட்ட வாய்ப்பை, போராடி தற்போது பெற்றுள்ளது. இதனால் திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ஏக மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்..
அநேகமாக வரும் 7ம் தேதி திமுக தலைவர் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.. இந்நிலையில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதை ஒட்டி, பெண் தொண்டர் ஒருவர் கோவிலுக்கு நாக்கை துண்டித்து காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை நேற்று ஏற்படுத்தியது.
ராசிபுரத்தில் அ.தி.மு.கதோல்வி.. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் ஓட்டுக்கு வேட்டு வைத்த நாம் தமிழர் கட்சி
வேண்டுதல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பொதுவக்குடியை சேர்ந்தவர் கார்த்திக்... இவர் தீவிரமான திமுக தொண்டர்... இவரது மனைவி வனிதாதான், ஸ்டாலின் முதல்வராக வர வேண்டுமென அங்குள்ள முத்தாலம்மன் கோயிலில் ஏற்கனவே வேண்டி கொண்டுள்ளார். ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டால், தன்னுடைய நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாகவும் அப்போது வேண்டியிருந்தார்.
வனிதா
தற்போது திமுக வெற்றி பெற்று ஸ்டாலினும் முதல்வராக போவதால், நேற்று வனிதா முத்தாலம்மன் கோயிலுக்கு சென்று தன்னுடைய நாக்கை அறுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். இதையடுத்து, வனிதாவை உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.. தேர்தல் நேர்த்தி கடனுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. அத்துடன், கடவுள் மறுப்பு பேசும் கட்சியில் இப்படி நடக்கிறதே என்ற விமர்சனமும் எழுந்தது.
நாக்கு
இதனிடையே வனிதா தனக்காக நாக்கை வெட்டிக் கொண்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஸ்டாலின், இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வனிதாவுக்காக தன் வருத்தத்தை தெரிவித்து கொண்ட ஸ்டாலின், இனிமேல் இதுபோன்ற துயரங்களை ஏற்படுத்தாமல், ஏழை - எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை காணிக்கையாக செலுத்துங்கள் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
துளி ரத்தம்
அதுமட்டுமல்ல, "தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன.
வெற்றி
உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திமுக தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது.. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.