எங்களுக்கு என்ன மரியாதை? அதிருப்தியில் திமுக கூட்டணி தலைகள்?.. சரி செய்வோம்! கையை பிசைந்த அறிவாலயம்!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு ஆளும் திமுக அரசு அனுமதி அளித்தது திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளையும் , நட்பாக இருக்கும் சில கட்சிகளையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் திமுகவின் பிரதான கூட்டணியான காங்கிரசின் சில தலைகள் இந்த முடிவால் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.
பட்டணப் பிரவேசத்தில் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. விசிக, திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் எதிர்த்தனர்.
தமிழக ஆளுநர் ஒரு சூரியன்.. ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் பேச்சு
எதிர்ப்பு
கடந்த ஞாயிற்றுக் கிழமை தடையை திரும்ப பெறுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி அறிவித்தார்.
இதனால் திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி பட்டணப் பிரவேசம் நடைபெற உள்ளது. கடந்த வாரம் முழுக்க இது தொடர்பாக தமிழ்நாடு அரசியலில் கடுமையான விவாதங்கள் செய்யப்பட்டன. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த முடிவை எதிர்த்தன. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தருமபுர ஆதீனத்தின் கோரிக்கையை ஏற்று இதற்கான தடையை நீக்கியது தமிழ்நாடு அரசு.
விசிக
இந்த நிகழ்வை கடந்த பல ஆண்டுகளாக திமுகவின் கூட்டணி கட்சியான விசிக எதிர்த்து வருகிறது. எக்காரணம் கொண்டும் இந்த நிகழ்விற்கு அனுமதி தரமாட்டோம் என்று விசிக கூறி வருகிறது. 2020ல் இவர்கள் செய்த போராட்டம் காரணமாக அப்போது தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் செல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்தார். அதேபோல் திகவும், பெரியார் தி.க அமைப்புகளும் இந்த பல்லக்கு நிகழ்விற்கு எதிராக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கடுமையாக போராட்டம் செய்துள்ளன.
போராட்டம்
ஒரு மனிதரை இன்னொரு மனிதர் தூக்குவது சரி அல்ல. அது அடிமைத்துவத்தின் அடையாளம். இந்த முறையை கைவிட வேண்டும். எக்காரணம் கொண்டு இதை அனுமதிக்க கூடாது என்று விசிக, இடதுசாரி கட்சிகள், பெரியார் அமைப்புகள் கூறி வருகின்றன. அப்போதெல்லாம் தருமபுரம் ஆதீனம் போராட்டத்திற்கு கட்டுப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை விசிக, இடதுசாரி கட்சிகளின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியில் இருக்கும் போதே தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லக்கு விழாவிற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அதிருப்தி
திமுகவின் கூட்டணி கட்சிகளை இந்த நிகழ்வு கடுமையாக அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். முக்கியமாக இந்த விவகாரத்தை தொடக்கத்தில் இருந்து எதிர்த்த விசிக நிர்வாகிகள், இந்த நிகழ்வால் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி.. திமுக இப்படி செய்துவிட்டதே என்ற ஏமாற்றம் விசிகவின் முக்கிய நிர்வாகிகள் இடையே காணப்படுவதாக கூறப்படுகிறது. பொதுவாக தங்கள் கூட்டணி கட்சி மீதான அதிருப்தியை சீக்கிரம் விசிக தலைவர்கள் நேரடியாக வெளிக்காட்ட மாட்டார்கள்.
சொல்லவில்லை
விசிக எம்பி திருமாவளவன் தன்னுடைய அதிருப்தி எதையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விசிக நிர்வாகிகள் பலர் இந்த விவகாரத்தால் அதிருப்தியில் இருக்கிறார்களாம். அதேபோல் இன்னொரு பக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஐ ஆகிய கட்சிகளும் இந்த விவகாரம் காரணமாக கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்களாம். கஷ்டப்பட்டு போராட்டம் செய்தோம், புகார் அளித்தோம்.. ஆனால் அரசு இப்படி கடைசி நேரத்தில் அனுமதி கொடுத்துவிட்டார்களே என்று அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
காங்கிரஸ்
ஆனால் அதே சமயம் திமுகவின் கூட்டணியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இந்த முடிவால் குஷியில் இருக்கிறார்களாம். அரசு யாருக்கும் அடிபணியவில்லை. பாரம்பரிய நிகழ்வு என்பதால் அனுமதித்து உள்ளனர். தேவையின்றி அரசு தடை விதித்து சர்ச்சையில் சிக்க வேண்டாமே. இந்த அரசு எல்லோருக்குமானது. அதனால் இந்த முடிவை வரவேற்கிறோம் என்று ஆளும் திமுகவின் கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.
திமுக பதில்
அதே சமயம் அறிவாலய தரப்பில் இதை பற்றி விசாரித்ததில்.. கூட்டணி கட்சிகளின் ஆதங்கம் புரிகிறது. இந்த வருடம் பல்லக்கு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துவிட்டனர். அதனால் அனுமதி அளித்தோம். அடுத்த வருடம் வேறு ஏற்பாடு செய்ய கூறி உள்ளோம். ஆதீனங்களும் ஆலோசிப்பதாக கூறி உள்ளனர். இதை கூட்டணி தலைவர்களுக்கும் புரிய வைப்போம். விளக்கம் கொடுத்து பிரச்னையை சரி செய்வோம். இந்த வருடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதால் அனுமதி அளித்துள்ளோம் என்று கூறி உள்ளனர்.