பொறுப்புள்ள அரசு கடன் வாங்கி செலவு செய்ய வேண்டும்! பாயிண்ட் பாயிண்டாக விளக்கி சொன்ன அமைச்சர் பிடிஆர்
சென்னை: திராவிட பொருளாதாரம் என்ற தலைப்பில் ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய அமைச்சர் பிடிஆர், தமிழக அரசின் பொருளாதாரம் குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர், திராவிட மாடல் வளர்ச்சி குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். புள்ளி விவரங்கள் உடன் அவர் கூறும் கருத்துகள் எதிர்க்கட்சிகளைத் திணறடித்துவிடும்.
திமுக செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடுகிறது. இந்நிலையில், ட்விட்டர் ஸ்பேஸ்ஸில் இன்று திராவிட பொருளாதாரம் என்ற தலைப்பில் அமைச்சர் பிடிஆர் உரையாற்றினார்..

அமைச்சர் பிடிஆர்
மக்களின் வரிப்பணத்தை அரசு எப்படிச் செலவழிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டது. கடனை திருப்பிச் செலுத்துவது, வட்டி செலுத்துவது, நலத்திடங்கள், முதலீடு உள்ளிட்டவற்றில் எதற்கு அதிக நிதி செலவிட வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், "இதில் கடனை திருப்பிச் செலுத்துவது, வட்டி செலுத்துவது இரண்டுமே ஒன்று தான். கடனுக்கான வட்டியை முறையாக நாம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அது திவால் நிலைக்குத் தள்ளப்படும்.

கடனை திருப்பி செலுத்திய வரலாறு இல்லை
எனக்குத் தெரிந்து எந்தவொரு அரசும் கடனை திருப்பிச் செலுத்தியதாக வரலாறு இல்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிலும் கூட இதே நிலைத்தான். அமெரிக்க அதிபராக கிளின்டன் இருந்த காலத்தில் மட்டுமே சிறு தொகை கடன் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது. அதைத் தவிரப் பார்த்தால் எந்தவொரு அரசும் கடனை திருப்பி செலுத்துவதாக இல்லை. கடன் அதிகரிக்க அதிகரிக்க மாநிலத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

செலவு
அதேநேரம் மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடுகளிலும் அதிகம் செலவிட வேண்டும். இதில் அனைவருக்குமான நன்மை கிடைக்கும். மாநில அரசு கடன் வாங்கி முதலீடு செய்வதே நல்லது. மாநில அரசு கடன் வாங்கும் போது அதற்குக் குறைந்த வட்டி தான். மேலும் அரசுத் திட்டத்தை முன்னெடுப்பதால் அதில் லீக்கேங் வரலாம் ஆனால் திட்டங்களுக்குத் தடை வராது. எனவே, அதிக பலன் கிடைக்கும்.

கடன் வாங்கி செலவு செய்யலாம்
பல்வேறு திட்டங்களில் அரசு செய்யும் முதலீடுகள் என்பதால் பொருளாதாரத்தைப் பல மடங்கு உயர்த்தும். அரசே முதலீடு செய்யும் போது, ரிஸ்க் குறைவு. ஒப்பிட்டளவில் முதலீடு தான் குறைவு. ஆனால் பலன் அதிகமாகவே கிடைக்கும். நான் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பொறுப்பு உள்ள அரசு கடன் வாங்கி செலவு செய்யலாம். அது மாநிலத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தவே செய்யும்.

பொருளாதார சரிவு
அதேநேரம் எதற்குக் கடன் வாங்குகிறோம் என்பது முக்கியம். அதிகம் கடன் வாங்குவதும், தேவையில்லாமல் கடன் வாங்குவதும் ஆபத்தானது. எனவே, அரசு நிச்சயம் கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு முதலே பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது. கடன் வாங்கி தேவையில்லாமல் செலவு செய்தார்கள். இதனால் கடன் பல மடங்கு அதிகரித்துவிட்டது. வட்டி கட்டவே கடன் வாங்கும் நிலை கூட ஏற்பட்டது.

வருவாய் பற்றாக்குறை
ஆனால், கடந்த 2021இல் திமுக ஆட்சி அமைத்த பிறகு தேவையில்லாத செலவைக் குறைக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறோம். வருவாய் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய 2025 வரை ஆகும் என நினைத்தேன். ஆனால், இப்போது எனக்கு நம்பிக்கை உள்ளது 2023க்குள் வருவாய் பற்றாக்குறையைச் சரி செய்துவிடுவோம். கடன் வாங்கி பல வளர்ச்சி பணிகள் செய்யலாம்.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில் தேவையில்லாமல் செலவு செய்தார்கள். கமிஷன் எடுக்க வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாமல் கலெக்டர் ஆபிஸ் போன்றவற்றைக் கட்டினார்கள். இனி வரும் காலங்களில் இதுபோன்ற தேவையற்ற கட்டிடங்கள் கட்டப்படுவது குறைக்கப்படும். இல்லம் தேடி கல்வி போன்ற ஆன்லைன் திட்டங்களுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கப்படும்" என்றார்












Click it and Unblock the Notifications