சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு.. நீதித்துறையை விமர்சித்ததால் புது சிக்கல்.. போலீஸ் அதிரடி
சென்னை: நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் கடந்த ஆண்டு 2024 நவம்பர் மாதம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது நீதித்துறை பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. நீதித்துறையை சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அவர் கூறியது சர்ச்சையானது.

இதையடுத்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகாரளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தை அணுகினார். சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் சார்லஸ் அலெக்சாண்டர் விடவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனுவை கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் விசாரித்தார். அப்போது சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை திருமங்கலம் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பிஎன்எஸ் சட்டப்பிரிவு 196 (மதம், இனம், மொழி, ஜாதி அல்லது பிற காரணங்கள் அடிப்படையில் இரு குழுவினர் இடையே பகைமை, வெறுப்பை ஏற்படுத்துதல்) மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவின் கீழ் வரும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திருமங்கலம் போலீசார் சீமானிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி விசாரணைக்கு ஆஜராகும்படி விரைவில் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு சம்மன் வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது சீமானுக்கு சிக்கலாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications