சென்னையில் தொழில் அதிபர் திருமண வீட்டில் திடீர் தீ விபத்து.. பதறியடித்த உறவினர்கள்.. பரபரத்த தி.நகர்
சென்னை: சென்னை தி.நகரில் திருமண வீட்டில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்ததது. இதனால் உறவினர்கள் அலறியடித்தபடி வீட்டை வீட்டு வெளியே ஓடினர். தொழில் அதிபர் வீட்டில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
சென்னை தி.நகர் யோகம்பாள் தெருவில், பிரமோத் சர்டா(வயது 48) என்பவர் வசித்து வருகிறார். தொழில் அதிபரான இவர் பர்னிச்சர் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் இவரது அண்ணன் மகளின் திருமணம் நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து பிரமோத்தின் உறவினர்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.

திருமண வீடு பகல் முழுவதும் களை கட்டியிருந்தது. தொழில் அதிபர் வீட்டு திருமணம் என்பதால் திருமணமும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வந்திருந்த உறவினர்களுக்கும் விருந்துகள் தடல் புடலாக பரிமாறப்பட்டது. திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த உறவினர்கள் பிரமோத் வீட்டின் முதன் தளத்தில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் முதல் தளத்தில் இருந்த ஏசியில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தீ பிடித்து எரிந்தது. முதல் தளம் முழுவதும் தீ மள மளவென பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அலறி அடித்த படி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். வீட்டின் முதல் தளம் முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
உடனடியாக திருமண வீட்டினர் தீ அணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அசோக் நகர், தி நகர், தேனாம்பேட்டை பகுதிகளில் இருந்து தீ அணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பிடித்ததும் உரிய நேரத்தில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த உறவினர்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வீட்டின் முதல் தளத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனதாக சொல்லப்படுகிறது. வீட்டில் தீ பிடித்தததும் வீட்டை விட்டு உறவினர்கள் அலறி அடித்த படி ஓடிச்செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டில் தீ பிடித்த சம்பவம் இன்று தி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications