தக, தகவென கொழுந்து விட்டு எரிந்த தீ.. 2 பஸ்கள் நாசம்.. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் பதற்றம்
சென்னை: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பஸ்களில் தீ பிடித்து மளமளவென எரிந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தக, தகவென கொழுந்து விட்டு எரியும் தீ.. 2 பஸ்கள் நாசம்.. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் பதற்றம் #Chennai #Fire pic.twitter.com/wdYY87of9u
— Oneindia Tamil (@thatsTamil) July 27, 2019
சென்னை கோயம்பேட்டில், மிகப்பெரிய ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 ஆம்னி பஸ்களில், இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள பயணிகள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர்.
தீ மளமளவென பரவி 3வது பஸ்சையும் நெருங்கிய நிலையில், தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீ பரவாமல் பார்த்துக் கொண்டனர். இருப்பினும் 2 ஆம்னி பஸ்களும் முழுவதும் எரிந்துவிட்டன.

நல்லவேளையாக பயணிகள் யாருக்கும் தீக்காயம் உள்ளிட்ட எந்த அசம்பாவிதமும் சம்பவிக்கவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இன்று சனிக்கிழமை. வீக் என்ட் என்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து அங்கு பெரும் கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்ற நிலையில், மேலும் பல பகுதிகளில் இருந்தும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் கோயம்பேடுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications