“மீண்டும் நான் விளையாட்டு துறை அமைச்சரானால் போடும் முதல் கையெழுத்து..” துணை முதல்வர் உதயநிதி உறுதி
சென்னை: "மீண்டும் திமுக ஆட்சியமைத்து, எனக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டால், நான் போடும் முதல் கையெழுத்து SDAT மாணவர்கள் விடுதிகளில் AC வசதி செய்து தருவதுதான்" என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் 5 ஆண்டுகால சாதனைகளை கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ஆர்யா, யோகிபாபு மற்றும் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கோவையைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு சைக்கிள் தேவைப்பட்டது. அது மிகவும் விலையுயர்ந்த சைக்கிள். அதை வரவழைக்க ஒரு மாதம் ஆகும் என்றும் கூறினார்கள். அப்போதுதான் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' போன்றே 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்' ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கூறினோம். உடனே ரூ.5 லட்சம் கொடுத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளில் 1,000 பேருக்கு ரூ.30 கோடி வழங்கியுள்ளோம். இதுவரை 500 பேர் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 41 விடுதிகளில் 2,500 பேர் தங்கியுள்ளனர். அனைத்து விடுதிகளுக்கும் டி.வி., குளிர்சாதன பெட்டி, ஸ்மார்ட் வாட்ச், சலவை இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மீண்டும் தி.மு.க அரசு அமைந்த பின் எனக்கு விளையாட்டுத் துறை ஒப்படைக்கப்பட்டால், என் முதல் கையெழுத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அனைத்து விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவதற்காக இருக்கும்" என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications