இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் கொலை; 24 மணி நேரத்துக்குள் கொலையாளிகள் 5 பேர் கைது; தொடரும் பதற்றம்!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் தமிழார்வன் நேற்று மாலை கொலை செய்யப்பட்ட நிலையில், 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா வியாபாரி மீது காவல்துறையினரிடம் தமிழார்வன் புகார் அளித்ததால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே 500-க்கும் மேற்பட்ட போலீஸார் நீடாமங்கலம் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைவீதியில் வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் நேற்று மாலை கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பற்றிய பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான நோக்கம் என்று ஆராய்ந்த போது கஞ்சா வியாபாரி குறித்து தமிழார்வன் போலீஸில் புகார் அளித்ததே காரணம் எனக் கூறப்படுகிறது.

தட்டிக்கேட்பு
கோனூர் கிராமத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ராஜ்குமார் என்பவர் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்று கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் தமிழார்வன் அதை தட்டி கேட்டதோடு ரவுடி ராஜ்குமார் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.

5 பேர் கைது
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் மூலம் விவகாரம் முதல்வர் கவனத்துக்கு சென்றதை அடுத்து, மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினார். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் தலைமறைவாக இருந்த ராஜ்குமார்,மாதவன், மனோஜ், சேனாதிபதி, எழிலரசன் ஆகிய 5 கொலையாளிகளை கைது செய்தனர்.

மக்களுக்கு பரிச்சயம்
இதில் ராஜ்குமாரை தவிர மற்ற நான்கு பேருக்கும் 20 வயது முதல் 23 வயது மட்டுமே ஆகிறது. கொலை செய்யப்பட்ட தமிழார்வன் நீடாமங்கலம் பகுதியில் மக்களுக்கு பரிச்சயமானவர் என்பதால் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட ஐவரிடமும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications