ஓட்டு போட்ட மக்கள் தான் பாவம்..இஷ்டத்துக்கு ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்! காலியான தொகுதிகள்
சென்னை: திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு செல்வதற்காக அடுத்தடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது ஐந்து தொகுதிகள் காலியாகி உள்ளன. இந்த தொடர் ராஜினாமாக்களால் அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்க முடியாமல் போயுள்ளது. தற்போதைக்கு அங்கு தேர்தல் நடத்தும் சூழல் இல்லாத நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலின் போதே அங்கே மக்கள் பிரதிநிதிகள் தேர்தெடுக்கப்படவுள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக தான் இதுவரை வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் அப்படியே தொடரும் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள். அதே நேரத்தில் ராஜினாமா மரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் தற்போதைக்கு ஐந்து சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

2026 சட்டமன்ற தேர்தல்
ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலின் போது தான் அந்த தொகுதிகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சமீபத்தில் "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு" என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு ஆதரவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
எம்.எல்.ஏ. வைத்திலிங்கம்
சட்டமன்ற செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற வைத்திலிங்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் காரணமாக, ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி தற்போது காலியாகியுள்ளது.
செங்கோட்டையன்
இதுபோலவே, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், தவெக தலைவர் நடிகர் விஜய் முன்னிலையில், அவரது கட்சியில் இணைந்தார். இந்த ராஜினாமாவால், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியும் காலியானது.
மனோஜ் பாண்டியன் - பொன்னுசாமி
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வந்த மனோஜ் பாண்டியனும், தனது ஆலங்குளம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுகவில் இணைந்தார். இதன் மூலம் ஆலங்குளம் தொகுதியும் காலியான தொகுதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதற்கிடையே, வால்பாறை தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலமானார். அதேபோல், சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்தார். இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே காலியாக இருந்த நிலையில், தற்போது ராஜினாமாக்கள் காரணமாக காலியான தொகுதிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறுமா?
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது மொத்தம் ஐந்து தொகுதிகள் காலியாக உள்ளன. பொதுவாக, எம்.எல்.ஏ. ஒருவர் ராஜினாமா செய்தாலோ அல்லது காலமானாலோ அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கும் குறைவான காலம் மட்டுமே இருக்கும் சூழலில், இடைத்தேர்தல் நடத்தப்படாது என்பது நடைமுறை விதியாக உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல்
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால், இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், நேரடியாக சட்டமன்றத் தேர்தலிலேயே இந்த தொகுதிகளுக்கு புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications