Flash Back: சென்னை அண்ணாசாலையில் 47 ஆண்டுகளுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட அந்த கருணாநிதி சிலை!
சென்னை: சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார். இதே சென்னை அண்ணாசாலையில் 1975-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை கம்பீரமாக கருணாநிதி சிலை காட்சி தந்தது.. அந்த சிலையும் கூட சரித்திரங்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறதுதான் சிறப்பு.
1930களின் இறுதியில் தொடங்கி கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக, இந்திய அரசியலில் தவிர்க்கப்பட முடியாத மாபெரும் அத்தியாயமாக திகழ்ந்தவர் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி. பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற காலம் அது..
1971-ல் சென்னையில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று விரும்பினார் தந்தை பெரியார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த தி.க. தலைவர் ஒருவர், அண்ணா காலத்திலேயே கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற பேச்சும் சர்ச்சையும் எழுந்தது. அண்ணா எத்தனையோ முறை கேட்டும் கருணாநிதி மறுத்தார். அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி முதல்வராக பதவி வகித்த போது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழாவை சென்னை வேப்பேரியில் பெரியார் நடத்தினார். அந்த நிகழ்வில்தான் கருணாநிதிக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்றார் பெரியார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த குன்றக்குடி அடிகளார் அதே மேடையிலேயே கருணாநிதி சிலை அமைக்க ரூ1,000 நன்கொடை கொடுத்தார் என சுட்டிக்காட்டினார். மேலும் தமக்கு சிலை அமைப்பதை விரும்பாத கருணாநிதி இதை தவிர்த்தும் வந்தார். ஒரு கட்டத்தில் தந்தை பெரியாருக்கு சிலை வைத்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என ஆமோதித்தார். இதனடிப்படையில்தான் சென்னை சிம்சனில் தந்தை பெரியாரின் கம்பீர சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்குப் பின்னரே 1975-ல் சென்னை அண்ணாசாலையில் மணியம்மையார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவைப் போல கையை உயர்த்தி பேசுகிற கருணாநிதி சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை 1984-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். மறைந்த நாளில் அவரது ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டது. கருணாநிதி சிலையில் நெஞ்சுப் பகுதியில் கடப்பாரை கொண்டு ஒரு ஆதரவாளர் அதை சேதப்படுத்தும் படம் அப்போது நாளிதழ்களில் வெளியாகி இருந்தது.
இந்தப் படத்தை முரசொலியில் மீள்பிரசுரம் செய்த கருணாநிதி, உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை
நெஞ்சிலேதான் குத்துகிறான்;
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!
என சிந்தை கலங்காது கவிதை எழுதினார்.
இப்போத் அதே சென்னை அண்ணாசாலையில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு இடையே ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் கம்பீர சிலை மீண்டும் நிறுவப்படுகிறது- இது ஒரு சரித்திரம்!












Click it and Unblock the Notifications