சென்னை மழையால் கோயம்பேடு சந்தையில் கூடை கூடையாக குப்பையில் கொட்டப்படும் பூக்கள்
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு பூ சந்தையில் பல்லாயிரக்கணக்கான பூக்கள் கூடை கூடையாக குப்பையில் கொட்டப்படுகின்றன.
சென்னை: கனமழை கொட்டி வருவதால் சென்னையில் பூக்கள் விற்பனை தேக்கமடைந்தது. மழை நீடிப்பதால் மலர்கள் அழுகத் தொடங்கியுள்ளன. பூ வியாபாரிகள் டன் கணக்கில் மலர்களை குப்பைகளில் கொட்டி வருகின்றனர்.
தீபாவளி முதலே மலர்களை வாங்கிச் செல்ல சில்லறை வியாபாரிகள் வராத காரணத்தால் பல கோடி மலர்கள் குப்பையில் வீணாக கொட்டப்பட்டதாக மலர் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக விடாமல் கொட்டி வரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஏரிகள் நிரம்பி வழிவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. பல ஆறுகளில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டுள்ளதால் மக்கள் இருளில் சிக்கி தவித்தனர்.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து 11ம் தேதி வட தமிழகம் அருகே வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கோயம்பேடு மலர் சந்தையில் தீபாவளி, கந்த சஷ்டி பண்டிகைக்காக வாங்கி வைத்த பூக்கள் அனைத்தும் அழுகி வீணாகி விட்டன. பூக்களை வாங்கிச் செல்ல சிறு வியாபாரிகளும் வராத காரணத்தால் டன் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பூக்களை வியாபாரிகள் குப்பைகளில் கொட்டினர்.
பூக்கள் விற்பனையில்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், கடை வாடகை,மின் கட்டணம் போன்றவைகளை கடன் வாங்கியாவது செலுத்தியே ஆகவேண்டும் என்றும் வியாபாரிகள் கவலையுடன் கூறியுள்ளனர். பூக்கள் விற்பனை செய்யப்பட்டாலும் குப்பையில் கொட்டப்பட்டாலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும், கடை வாடகை கொடுக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் கவலையாகும். தீபாவளி பண்டிகை நாளில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய பூக்கள் அனைத்தும் மழையால் அழுகி குப்பையில் கொட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications