சென்னையில் பாஜக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. பூட்டிய வீட்டை திறந்து ரெய்டு
சென்னை: சென்னையில் சேலையூரில் பாஜக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இதனால் எந்த ஆவணங்களும் இல்லாமல் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. அவ்வாறு யார் எடுத்து சென்றாலும் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். இது பணம் விநியோகத்தை தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது.
அது போல் பரிசு பொருட்கள், டோக்கன்கள் உள்ளிட்டவைகளின் விநியோகமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்னும் கேட்டால் திமுக எம்பிக்கள் கனிமொழி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் வாகனங்களில் கூட பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் சேலையூரில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் உள்ளார். அவருடைய வீட்டில் பணம், பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரை அடுத்து பறக்கும் படையினர் 3 வாகனங்களில் அங்கு சென்றனர்.
அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடைய உறவினர்களை வரவழைத்து சாவியை கொண்டு வரச்சொல்லி கடந்த ஒன்றரை மணி நேரமாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இங்கு கைப்பற்றப்படுவது என்ன என்பது சோதனையின் முடிவில்தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications