பத்திரப்பதிவு கட்டணங்கள்.. நாடு முழுக்க மாநில அரசுக்கு நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவுறுத்தல்
சென்னை: மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற பகுதிகளில் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மாநிலங்களின் வரி வருவாயில் முக்கிய பங்கு வகிப்பது பத்திரப்பதிவு கட்டணங்கள் ஆகும். பத்திரப்பதிவு கட்டணங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. பத்திரப்பதிவு துறை நிலம்-வீடு விற்பனை தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்ய மக்கள் பணம் கட்டி முத்திரைத்தாள் வாங்க வேண்டும். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசாங்கம் கருவூலத்துக்குத் தேவையான வரி கிடைக்கும். ஒருவர் நிலம் இன்னொருவருக்கு மாறும் போது கணிசமான தொகை அரசுக்கு வரியாக கிடைத்து வருகிறது. இது தவிர முத்திரைத்தாள் என்கிற வகையிலும் கிடைக்கிறது.
இந்த கட்டணங்கள் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சதவீதம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்வோருக்கு இந்த கட்டணம் சுமையாக உள்ளதால் இதனை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. பெட்ரோல் டீசல் மீது எப்படி மாநிலங்கள் வரி விதிக்கின்றனவோ அதுபோல் தான் பத்திரப்பதிவிலும் வரிகளை மாநில அரசுகள் விதிக்கின்றன.
இந்நிலையில் இன்றைய பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி முறையில் நிலையான வருமான விலக்கு ₹ 50,000 லிருந்து ₹75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் புதிய வருமான வரி முறையில் 4 கோடி சம்பளதாரர்கள் பயன்பெறுவர் என்றும் கூறினார். மேலும் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் நகர்ப்புறம் 2.0வின் படி, நகரத்திலுள்ள 1 கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயனடையும் வகையில் 10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் கூறினார்.
சூரிய சக்தி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் நிலச்சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்ப்புற பகுதிகளில் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும் மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000-லிருந்து ரூ.40,000 எனவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.1,000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் கடந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications