ஃபீல் பண்ணாதீங்க! மாஸ் என்ட்ரி கொடுப்பேன்! கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்
சென்னை: தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்து அவருடைய நண்பர்களும், சக வீராங்கனைகளும் கதறி அழுகிறார்கள்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா. இவர் கால்பந்து வீராங்கனை. இந்த விளையாட்டின் மீதான அதீத ஆர்வம் காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார்.
ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா, அங்கும் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் அண்மையில் அவர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

கொளத்தூர்
இதையடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அந்த மாணவிக்கு காலில் வலி குறையவில்லை. இதை பெற்றோரிடம் கூறினார். அதன் பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரியாவை கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் மாணவியை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

கொளத்தூர் மருத்துவமனை
அப்போது கொளத்தூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது பிரியாவின் காலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியது. இதனால் நன்கு இறுக்கமாக கட்டு கட்டப்பட்டு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். இதன் எதிரொலியாக காலில் ரத்தவோட்டம் பாயாமல் தசைகள் அழுகிவிட்டதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனராம்.

கால் அகற்றம்
இதனால் காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள், பிரியாவின் உறவினர்களிடம் கூறினர். எனினும் அவர் பிழைப்பார் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்க முடியாது என்றனராம். இதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்து அவர்களிடம் கையெழுத்து பெற்று ஆபரேஷன் நடத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிறுநீரகம், ஈரல், மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு அவர் இன்று காலை உயிரிழந்தார். நேற்று இரவும் நன்றாக இருந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்தது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்
இந்த நிலையில் மாணவி உயிரிழப்பதற்கு முன்பு அதாவது அவரது வலது கால் அகற்றப்படுவதற்கு முன்பு தனது வாட்ஸ் ஆப்பில் அவர் வைத்திருந்த ஸ்டேட்டஸ் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் அனைத்து நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கும், நான் சீக்கிரமாகவே ரெடி ஆயிட்டு திரும்பி வருவேன். அதனால் எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க. என்னோட மாஸ் என்ட்ரி குடுப்பேன். என்னோட கேம் என்ன விட்டு போகாது. நீங்க நான் திரும்பி வருவேன்னு நம்பிக்கையால் இருங்க. லவ் யூ என குறிப்பிட்டிருந்தார். கால்பந்தாட்டத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சிறகடித்து பறந்த அந்த மாணவியின் கனவு சிதைத்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications