வெளிநாட்டு நிதி ரெய்டு:சிக்கலில் சீமான்-பிப்.5-ல் நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தி ஆஜராக NIA உத்தரவு
சென்னை: வெளிநாட்டு நிதி விவகாரம் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளரான சீமானின் வலது கரம் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA- என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி இன்று NIA சம்மன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜரானார். மீண்டும் வரும் 5-ந் தேதி விசாரணைக்கு வர இடும்பாவனம் கார்திக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் நாம் தமிழர் என்ற இயக்கத்தை திரைப்பட இயக்குநராக இருந்த சீமான் தொடங்கினார். பின்னர் இந்த இயக்கம் அரசியல் கட்சியாக உருமாறியது. தொடக்கத்தில் அதிமுகவை வெளிப்படையாக ஆதரித்தது. ஆனால் தேர்தல் அரசியலில் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியின் பிரதான விமர்சனம் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக, காங்கிரஸ், பாஜக ஆகியவை மீதுதான் இருந்து வருகிறது.

அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மென்மை இந்துத்துவா கோட்பாடுகள் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் படங்கள், கொடிகளை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தினாலும் நடவடிக்கைகள் பாயவில்லை ஏன் என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரது வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். சீமானுக்கு மிக நெருக்கமான சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் வீடுகளில் இந்த சோதனைகள் அதிகாலை 4 மணி முதல் நடைபெற்றன. இதனால் சீமானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை மிக கடுமையாக விமர்சித்ததால் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சாட்டை துரைமுருகன்.
இதனிடையே சீமான் கட்சியின் முக்கிய நிர்வாகியான மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். வெளிநாட்டு நிதி விவகாரத்தில் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராக இடும்பாவனம் கார்த்திக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதனடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முன்பாக இடும்பாவனம் கார்த்தி ஆஜரானார். அவரை மீண்டும் வரும் 5-ந் தேதி ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications