"இன்னும் ஏகப்பட்ட முதலீடுகள் வரும்!" வெளிநாட்டு பயணத்தை முடித்த கையோடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே ஏர்போர்ட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இந்தப் பயணத்தில் தான் மிக அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். எட்டு நாள் பயணத்தில் அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

ஸ்டாலின் சென்னை திரும்பினார்
அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் இன்று மன நினைவோடு சென்னை திரும்பியுள்ளேன்.. மிகவும் திருப்திகரமான பயணமாக இது இருந்தது" என்றார்.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ரூ.15,516 கோடி மதிப்பிலான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்றும் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17,613 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த வெளிநாட்டுப் பயணத்தில் தான் மிக அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்றும் இது ஒரு வெற்றிகரமான பயணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் செய்தியாளர் சந்திப்பு
முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், "மன நிறைவோடு திரும்பி இருக்கிறேன். இந்தப் பயணம் வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது.. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு ரூபாய் 15,516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன
இந்தப் பயணத்தை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.. வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாகத் தான் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தைத் திறந்து வைத்தேன். இது நான் நினைத்துப் பெருமைப்படும் விஷயம்.

அவதூறுகளைப் பரப்புகிறார்கள்
முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதல்வராக மட்டுமல்லாமல், திராவிட இயக்கத் தலைவராக, பெரியாரின் பேரனாக, தமிழனாக இந்தப் பயணம் அனைத்து வகையிலும் மறக்க முடியாததாக ஒன்றாக அமைந்துள்ளது.. தனிப்பட்ட முறையிலும் இந்தப் பயணத்தை என்னால் மறக்கவே முடியாது. இந்த வெற்றிப் பயணத்தைச் சிலரால் இதைப் பொறுக்க முடியவில்லை. அதனால் தான் அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் தமிழ்நாட்டில் இருக்கும் மனிதவளம், உள் கட்டமைப்பு, சலுகைகள், வெளிப்படையான அரசு நிர்வாகம் குறித்த தகவல்களை முதலமைச்சராக நானே எடுத்துச் சொல்கிறேன். பலரும் தமிழகத்தில் இருக்கும் திறனைக் கேட்டு வியந்து போகிறார்கள். தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற வெளிநாட்டுப் பயணங்கள் தொடரும்" என்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதில்
முதல்வர் ஸ்டாலின் தனது தனிப்பட்ட சொத்தை முதலீடு செய்யவே வெளிநாடு போய் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்கும் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். இது குறித்த கேள்விக்கு அவர், "ஆம், சுயமரியாதைக் கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி அது குறித்து அப்படிக் கூறியிருக்கலாம்" என்றார்.
அப்போது அதிமுகவில் செங்கோட்டையின் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இருப்பினும், அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த முதல்வர் ஸ்டாலின், "ஆக்கப்பூர்வமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.. அக்கப்போரான விசயங்களைப் பற்றிப் பேச வேண்டாம்" எனச் சுருக்கமாகப் பதிலளித்தார்..
அதிகபட்ச முதலீடுகள்
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு மவுனப் புரட்சி செய்து கொண்டிருக்கிறோம். மத்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும் அதையும் மீறி முதலீடுகளைக் கொண்டு வந்திருக்கிறோம். வெளிநாட்டுப் பயணங்களிலேயே இதுதான் அதிகபட்ச முதலீடுகளை ஈர்க்கும் பயணமாக இருந்துள்ளது. இதுபோன்ற பயணங்கள் வரும் காலங்களிலும் தொடரும்" என்றார்.












Click it and Unblock the Notifications