போக்குவரத்து முதல் நிதி வரை.. செங்கோட்டையன் இதுவரை எந்தெந்த துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையனுக்கு, புதிய அமைச்சரவையில் நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் காலம் முதல் அரசியலில் முக்கிய பங்காற்றி வரும் செங்கோட்டையன், 6-வது முறையாக அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்றார்கள். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றார்கள். இவர்களுக்கான துறைகள் கிட்டத்தட்ட ஒருவாரம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையனுக்கு நிதித்துறை
இதில் அதிமுகவில் இருந்து தவெக பக்கம் தாவிய செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் தற்போதுள்ள அரசியல் தலைவர்களில் மிக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் பல முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.எல்.ஏவாக வென்ற இவருக்கு கேபினட்டில் இடம் கிடைக்கவில்லை.
எனினும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. அவரது அமைச்சரவையில் 3 முறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தற்போது 6-வது முறையாக அமைச்சராகியுள்ளார். தவெக அமைச்சரவையில் மிகவும் சீனியர் என்றால் செங்கோட்டையன் மட்டுமே. தற்போது கேபினட்டில் உள்ள அனைவருமே முதல் முறை அமைச்சரானவர்கள். செங்கோட்டையன் இதுவரை எந்தெந்த துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார் என்ற விவரங்களை பார்க்கலாம்.
* போக்குவரத்துத்துறை அமைச்சர் (1991 - 1996)
* வேளாண்மைத்துறை அமைச்சர் (2011)
* தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் (2011 - 2012)
* வருவாய்த் துறை அமைச்சர் (2012 - 2012)
* பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் (2017 - 2021)
* நிதியமைச்சர் (2026 - தற்போது)
செங்கோட்டையன் கடந்து வந்த பாதை
அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக விளங்கிய செங்கோட்டையன், அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்.எல்.ஏவாக வென்றார். 1977-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு தொடர்ந்து, கோபிச்செட்டிபாளையம் தொகுதியை தனது கோட்டையாக மாற்றிய செங்கோட்டையன் அங்கு தொடர்ச்சியாக வென்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு செங்கோட்டையன் முதல்வராகும் சூழலும் ஏற்பட்டது. எனினும், ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பு தவறியது.
எடப்பாடி அமைச்சரவையில்
அதன்பிறகு பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும், கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையன் வென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவருக்கும் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் குரல் கொடுத்தார். இதனை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையன், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியாக மாறினார். விஜய்க்கு நெருக்கமானவராக மாறிய செங்கோட்டையனுக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications