அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் கைது.. சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
சென்னை: கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் மதிப்பு நிலத்தை சட்ட விரோதமாக பத்திரபதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் இன்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைதான எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர், சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.100 கோடி நில மோசடி புகாரில் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் மதிப்பு நிலத்தை சட்ட விரோதமாக பத்திரபதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தான் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் கைது ஆகியிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் எம்.ஆர். சேகர் தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படு இருந்தது. முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, எம்.ஆர். சேகர் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் சேகரை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தோட்டக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் கரூர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு இருந்தார்.
கேரளாவில் தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கபப்ட்டு இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது. இதையடுத்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட எம்.ஆர் விஜயபாஸ்கர், சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில்தான், எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கின் விவரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதையடுத்து, கரூர் - மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதரும், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து ஒரு புகார் அளித்து இருந்தார்.
இதன் அடிப்படையில் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்று அச்சமடைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜூன் 12 ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது முன் ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications