ரூ 17 கோடி மோசடி வழக்கு! அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் கைது! சொந்த சகோதரியே புகார்
சென்னை: தனது சொந்த சகோதரியிடம் ரூ 17 கோடி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19ஆவது வார்டு கவுன்சிலராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார்.

இவர் மீது இவருடன் உடன்பிறந்த அக்கா பொன்னரசு என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் ராஜா, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 சதவீதம் பங்குகளை தருவதாக கூறினார்.
இதற்காக ஸ்ரீபெரும்புதூர் நந்தம்பாக்கத்தில் உள்ள எனது கணவரது 2 ஏக்கர் சொத்தின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ 11 கோடி பெற்றோம். அந்த பணத்தை எனக்கே தெரியாமல் ராஜாவின் மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டார்.
ராஜா தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொழில் தொடங்குவதாக எங்களிடம் தெரிவித்தார். அதில் முதலீடு செய்தாலும் அதிக பங்குகளை தருவதாக கூறியிருந்தார். இதனால் என்னுடைய 300 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். அதை ராஜா அடமானம் வைத்து பணம் பெற்றார்.
அந்த படத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் இடத்தை அவரது பெயரில் வாங்கிக் கொண்டார். அந்த லாபத்தில் எனக்கும் என் கணவருக்கும் பங்கு கொடுக்கக் கூடாது என்பதால் எங்கள் கையெழுத்தை ராஜாவும் அவரது மனைவியும் போலியாக போட்டு எங்களுக்கு சேர வேண்டிய பங்குகளை சட்டவிரோதமாக ராஜா தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் பொறுப்பில் இருந்து நாங்கள் விலகுவதாக ஒரு கடிதத்தையும் தயார் செய்து அதை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து என்னை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவரது மனைவி அனுஷாவை நியமித்தார்.
என்னை 17 கோடி ரூபாய் ஏமாற்றிய ராஜா, அவரது மனைவி அனுஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் பொன்னரசி தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பொன்னரசி கொடுத்த புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்து கொண்டனர். இந்த நிலையில் ராஜா எப்போது வேண்டுமானாலும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல நேரிடும் என்பதால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அனைத்து விமான நிலையங்களிலும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து மலேசியா செல்ல ராஜா, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.












Click it and Unblock the Notifications