கோயில் திருவிழாவில் சிக்கன் 65 சமைத்து உதவிய அதிமுக ஜெயக்குமார்! மூலக்கொத்தளத்தில் DJ கெத்து!
சென்னை: சென்னை மூலக்கொத்தளம் அலங்கார முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி பெண் பக்தர்கள் சிக்கனையும் முட்டையையும் சமைத்துக் கொண்டிருந்த போது சிக்கன் 65யை பொறித்து அசத்தினார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பவர். பிரஸ் மீட்டாக இருந்தாலும் சரி அவரிடம் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு எந்த சலனமும் இல்லாமல் மரியாதையுடன் நாகரிகத்துடன் பதில் அளிப்பார்.

அதிமுக குறித்தோ அல்லது தனிப்பட்ட முறையில் சர்ச்சைக்குரிய கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தாலும் தனக்கே உரிய ஸ்டைலில் பதிலை அளிப்பதில் ஜெயக்குமார் வல்லவர். அவருடைய பதில் யாரையும் காயப்படுத்துவது போன்று இருக்காது.
அதிமுகவில் இவர் ஆற்றிய பணிக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட் வில் புக்கில் இடம் பெற்றிருந்தார். அத்துடன் அவர் பரிசாக கொடுத்த வாட்ச்சை இன்னமும் ஜெயக்குமார் பொக்கிஷமாக வைத்துள்ளார்.
பிரஸ்மீட்டிலும் கட்சி தொண்டர்களுடனும் வெளியே மாற்றுக் கட்சியினருடனும் நன்றாக பழகுவதில் வல்லவர். அரசியல் நாகரிகத்துடன் எல்லாரையும் அணுகுவார். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக மீது விமர்சனங்களை முன் வைத்தாலும், பொது இடத்திலும் அவரை பார்த்ததும் ஜெயக்குமார் பேசி சிரித்து அரட்டை அடிப்பார்.
ஒரு முறை தலைக்கு டை அடிப்பது குறித்தும் கூட இருவரும் பேசி சிரித்தனர். கடந்த முறை ராயபுரம் தொகுதி எம்எல்ஏவாகவும் மீன்வளத் துறை அமைச்சராகவும் ஜெயக்குமார் இருந்தார். ஆனால் தற்போது 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளரிடம் ஜெயக்குமார் தோல்வி அடைந்தார்.
தற்போது எந்த பதவியில் இல்லாவிட்டாலும் வீட்டுக்குள்ளயே முடங்கி கிடக்காமல் கட்சிப் பணிகள், நலத்திட்டங்களை செய்து வருகிறார். மக்களுடன் மக்களாக பழகி வருகிறார். அந்த வகையில் அவரை அழைக்கும் சுபவிசேஷங்களுக்கு சென்று வருகிறார். அங்கும் கலகலப்பாக இருப்பார். அண்மையில் கூட காது குத்து விழாவுக்கு சென்ற ஜெயக்குமார், இரு குழந்தைகளின் தலையில் விளையாட்டாக தட்டி விளையாடி மகிழ்ந்தார். இருவருக்கும் பரிசு பொருளை கொடுத்தது மட்டுமல்லாமல் பணத்தையும் கொடுத்தார்.
அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் கிங்காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற ஜெயக்குமார், கிங்காங்கை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டார். இதுதான் ஜெயக்குமார்! எந்த வித்தியாசமும் பார்க்காமல் பழகுவார். அமைச்சராக இருந்த போதும் சரி எம்எல்ஏவாக இருந்த போதும் சரி அவரது பழக்க வழக்கத்தில் மாறவில்லை என்கிறார்கள்.
கடந்த ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டிற்கு காரில் சென்ற போது எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு புல் தரையில் உட்கார்ந்து நிர்வாகிகளுடன் ஜெயக்குமார் பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்தார். அவர் நினைத்திருந்தால் காரில் ஏசி போட்டு சாப்பிட்டிருக்க முடியும். ஆனால் அவர் செய்யவில்லை.
அது போல் ஏதாவது விழாக்களுக்கு செல்லும் போது அங்கு உணவு சமைத்தால் அதற்கு போய் உதவுவார். விளையாட்டு போட்டிகளை இவர் விளையாடி தொடங்கி வைப்பார். அந்த வகையில் சென்னை மூலக்கொத்தளம் அலங்கார முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது.
இந்த விழாவில் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அங்கு அம்மனுக்கு பெண் பக்தர்கள் சிக்கன் 65, முட்டையை சமைத்து கொண்டிருந்தனர். இவர் போய் அங்கு உட்கார்ந்து முட்டையையும் சிக்கன் 65 யையும் சமைத்து கொடுத்தார். மேலும் சாப்பிட்டு பார்த்து டேஸ்ட் நன்றாக இருப்பதாக பாராட்டிச் சென்றார்.












Click it and Unblock the Notifications