விபத்தில் சிக்கிய பாட்டி.. நெற்றியில் வழிந்த ரத்தம்.. வேட்டியை மடித்துக்கட்டி களமிறங்கிய ஜெயக்குமார்
சென்னை: புழல் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் அவர்களை மீட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சாலைகளில் பயணம் செய்யும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. மழை காலங்களில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது சாதாரண விசயமில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பது போலத்தான் உள்ளது. செங்குன்றம் அருகே தனது மகனோடு இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கினார் ஒரு மூதாட்டி. சாலையோர வெள்ள நீரில் தலையில் ரத்தம் வழிய விழுந்திருந்த அவரை மீட்க ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை.

அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விபத்தில் சிக்கிய மூதாட்டியை காப்பாற்றி ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார். வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களமிறங்கிய ஜெயக்குமார், அந்த பாட்டியின் கால்களை பிடித்து தூக்கி ஆட்டோவில் ஏற்றினார். அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்க சொன்னதோடு ஆட்டோ டிரைவருக்கு பணத்தையும் கொடுத்தனுப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ள ஜெயக்குமார், செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிய போது சென்னை புழல் அருகே மூதாட்டி ஒருவருடன் இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் விபத்துக்குள்ளாகி இருந்தனர். 10 நிமிடங்களுக்கு மேலாக ஆம்பூலன்ஸ் வராமலும் எந்தவித உதவியும் பெறாத நிலையிலும் இருந்தனர். பிறகு நான் ஆட்டோ ஒன்று ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். அந்த சாலையில் சென்ற யாரும் மூதாட்டி காயமுற்று கிடப்பதை கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதை பார்க்கும் போது மனிதம் மறந்து வருவதை நம்மால் உணர முடிந்தது. இன்று வேறொருவருக்கு என கடந்து போனால் நாளை நமக்கும் அது தான்! இருப்போம் சற்று ஈரத்துடன்! மருத்துவ உதவியே மகத்தான உதவி! என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications