"பாரதம்" மீது விரோதமில்லையே.."இந்தியா" மீது ஏன் இவ்வளவு வெறுப்பய்யா? 'பதூசா' பாய்ந்த ப.சிதம்பரம்
சென்னை: "இந்தியா" என்ற பெயர் மீது மத்திய பாஜக அரசுக்கு ஏன் இத்தனை வெறுப்பு, காழ்ப்பு என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: அரசியல் சாசனத்தில் இந்தியா எனும் பாரத் என இருக்கிறது. அதாவது இந்தியாவும் இருக்கிறது பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம் பாரத்தையும் பயன்படுத்துகிறோம்.

திடீரென இந்தியா மீது என்ன கோபம்? இந்த எதிர்க்கட்சி கூட்டணி I.N.D.I.A அப்படின்னு தன்னுடைய பெயரை சுருக்கி எழுதுவதால் "இந்தியா" மீது கோபம் வந்துருச்சு. நாளைக்கே BHARAT என எதிர்க்கட்சிக் கூட்டணி வைத்தால் என்ன செய்வார் திரு மோடி? பாரத்தையும் மாற்றிவிடுவாரா?
இது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள். இந்தியா என்பதும் ஒன்றுதான். பாரத் என்பதும் ஒன்றுதான். உதாரணத்துக்கு பாரதியார், பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வர் என பாடியிருக்கிறார். ஆக பாரதம் என்பது நமக்கு ஒன்றும் விரோதம் இல்லை. ஆனால் இந்தியா மீது இவ்வளவு கோபம், வெறுப்பு, காழ்ப்பு திடீரென வந்ததுதான் வியப்பாக இருக்கிறது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
முன்னதாக நேற்று ப.சிதம்பரத்தின் மகனும் லோக்சபா எம்.பி.யுமான கார்த்த் சிதம்பரம் கூறுகையில், இந்தியா என்ற பெயரை தமிழகத்தில் பாரதம் என அழைக்கிறோம். இது தவறு இல்லை. ஆனால் இந்தியாவின் பெயரை பாரதம் என அதிகாரப்பூர்வமாக மாற்றப் போகிறார்களா? அல்லது நடைமுறைக்காக பயன்படுத்தப் போகிறார்களா? என்பது தெரியவில்லை. பாரத் என அதிகாரப்பூர்வமாக மாற்றினால் நடைமுறையில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்; அவை அனைத்தும் புதியதாக பாரத் என்ற பெயருடன் அச்சிட வேண்டும். பாஸ்போர்ட்டுகள் அனைத்திலும் பாரத் என மாற்ற வேண்டும். இப்படி நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளன என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications