‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ Heroes இவர்கள்… தடைகளை வென்ற பட்டியலின வெற்றியாளர்கள்!
சென்னை: பலரிடம் தொழில் தொடங்குவதற்கான மூளை இருக்கும், ஆனால் முதலீடு இருக்காது. முதலீடு இல்லை என்றால் முதலாளி ஆக முடியாது. இதுதான் வணிகத்தின் விதி. எந்த ஒரு தொழிலையும் தொடங்க மூலதனம் முக்கியம்.
ஆனால், மூளை இருந்தால் போதும், முதலீடு தாங்கள் தருகிறோம் என்கிறது 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு'. இதன் மூலம் பல புதிய தொழில்முனைவோரை உருவாக்கி உள்ளது தமிழ்நாடு அரசு. இதிலும் பட்டியலினத்தவராக இருந்தால், அவர் தொழில்முனைவோராக மலர தனியாக நிதியை ஒதுக்கித் தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அந்த நிதி முதல் தலைமுறையைச் சேர்ந்த பலரை முதலாளியாக்கி உள்ளது. அதன்மூலம் வாழ்வில் வென்றவர்கள் இங்கே 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டத்தின் வெற்றி ரகசியம் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
வடசென்னையைச் சேர்ந்த ஸ்ரீ வித்யா:
"எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை தொழில்முனைவோர். இதற்கு முன் யாருமே இல்லை. அப்படிப்பட்ட பின்னணியிலிருந்து ஒரு பெண்ணாகத் தொழில் தொடங்குவது மிகப் பெரிய சவால். ஆனால், எனக்குத் தொழில்முனைவோராக வேண்டும் என்று கனவு இருந்தது.
நாங்கள் 'ஹெல்த் அட்டை' தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறோம். உடல் பரிசோதனை தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் டிஜிட்டல் வடிவில் அனைவரும் வைத்திருக்கவேண்டும். அதை எளிமைப்படுத்தித் தருவதே எங்கள் இலக்கு. அதற்கான பொருளைத்தான் நாங்கள் தயாரித்து வருகிறோம்" என்றபடி பேசத் தொடங்குகிறார் ஸ்ரீ வித்யா பவானி.

"நான் பிறந்து வளர்ந்து எல்லாம் வடசென்னையில் உள்ள வியாசர்பாடிதான். அந்தப் பகுதியிலிருந்து ஒரு பெண் தொழில் தொடங்க வருவது அரிதான விசயம். ஸ்டார்ட் அப் என்பது சும்மா இல்லை. புதியதாக நாம்தான் உருவாக்கவேண்டும்.
அதற்கு முதலில் நிறைய நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு பெண்ணாகத் தொழில் தொடங்கப் போகிறேன் என்றால் யாரும் உடன் நிற்க முன்வர மாட்டார்கள். ஆகவே, அதிக உழைப்பை நாம் கொடுத்தாக வேண்டும்.
தொழில் ஆரம்பிக்க வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால், யாரை நம்புவது? யாரிடம் ஆலோசனை பெறுவது? இப்படிப் பல குழப்பங்கள் இருந்தபோது 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' மூலமாகச் சரியான பாதையில் பயணிக்க நிறைய ஆலோசனைகளை அளித்தார்கள். அவர்கள் அளித்த ஊக்கம்தான் எனக்கு உண்மையாகப் பயனுள்ளதாக இருந்தது" என்கிறார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ்:
இவரைப் போன்று 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' மூலம் தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணதாஸ். அவரது அனுபவம் எப்படி? "அடிப்படையில் நான் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர். எனக்குப் பூர்வீகம் விழுப்புரம் மாவட்டம் பக்கம் உள்ள ஒரு சின்ன கிராமம். குடும்பத்தில் அனைவரும் விவசாயிகள். நான்தான் முதல் தலைமுறை தொழில்முனைவோர்.

எங்கள் கிராமத்தில் 30 ஆண்டுகள் முன்பு பொறியியல் படித்த முதல் ஆள் நான்தான். பல ஆண்டுகளாக ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தேன். அங்கே நிறைய அனுபவம் கிடைத்தது. ஒரு தொழிலை எப்படி நடத்துவது? எப்படி இலாபம் பார்ப்பது? போன்ற நுணுக்கங்களை எல்லாம் அங்கேதான் கற்றேன்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு, தொடர்ந்து தொழிலாளியாக இருப்பதைவிட்ட, நாமே தொழில் தொடங்கினால் அதிக லாபம் பெறலாம். 4 பேருக்கும் நாம் வேலையும் தரலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
என்னிடம் பண பலம் இல்லை. குடும்பத்திலும் பெரிய அளவுக்குப் பொருளாதார பலம் இல்லை. நமக்கு ஐடியா இருக்கலாம். ஆனால், தொழில் தொடங்க பணம்தான் முக்கியம். நம்மை நம்பி யாராவது முதலீடு செய்தால்தான், நம் திறமையை நாம் மெய்ப்பிக்க முடியும்.
யாரை அணுகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போதுதான் தமிழ்நாடு அரசு 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார்கள்.

அதன் மூலம் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் புதியதாகத் தொழில் தொடங்க, கடந்த ஆண்டு 30 கோடியை ஒதுக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த வாய்ப்பை என்னைப் போன்றவர்களுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகத் தெரிந்தது. என்னிடம் டெக்னிக்கல் அறிவு உள்ளது. அனுபவம் உள்ளது. ஆனால், பணம் இல்லை. என்ன செய்வது?
ஆகவே, தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருந்த 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டத்திற்காக விண்ணப்பித்தேன். முதல்வர் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கிய தொகையை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். திட்டத்தில் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை.

விண்ணப்பம் கொடுத்தேன். உடனடியாக நான் தகுதியான நபரா எனச் சோதித்தார்கள். ஒவ்வொரு கட்டமாக எனது விண்ணப்பம் முறையாக அனுப்பிவைக்கப்பட்டது. இறுதியாகத் தகுதியானவர் என்பது உறுதியானது உரியக் கடனுதவியை அளித்தார்கள்.
நாங்கள் விவசாயம் தொடர்பான வேலைகளுக்கு உதவும் தொழில்நுட்பத்தைத் தயாரிக்கிறோம். நெல், கம்பு அல்லது வேறு எந்த சிறு தானியங்களாக இருந்தாலும் அறுவடை முடிந்த பிறகு அதை முறையாகச் சுத்தம் செய்து உங்களுக்குச் சந்தையில் விற்பனை செய்யும் தரத்தில் கொடுத்துவிடும்.
இப்போது விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. அந்தக் காலத்தில் பலபேரின் வேலையை இந்த ஒரே இயந்திரம் செய்து முடித்துவிடும். அதைத் தயாரிக்கும் கம்பெனியைதான் நான் தொடங்கி உள்ளேன்" என்கிறார்.

"பட்டியல் இனத்தைப் பொறுத்தளவில் இரண்டு வளர்ச்சிகள் இன்றியமையாதது. முதலில் கல்வி வளர்ச்சி தேவை. அது இருந்தால்தான் மற்ற சமூகத்தினருடன் சமமான உரிமையைப் பகிர்ந்துகொள்ள முடியும். இன்று பட்டியலின மக்கள் கல்வியில் குறிப்பிட்ட அளவு முன்னேறிவிட்டனர்.
இரண்டாவது பொருளாதார அளவிலான வளர்ச்சி. அதற்குத் தொழில் தொடங்க வேண்டும். அதைத் தொடங்க வங்கியில் கடன்பெற வேண்டும். வங்கிக் கடன் என்றால் அசையா சொத்து மதிப்பைக் காட்ட வேண்டும். அதைக் காட்டினால்தான் ஒரு பங்கு கடன் கிடைக்கும். பட்டியலின மக்களிடம் சொத்துகள் கிடையாது.
ஆகவே வங்கிகள் கடன் தராது. அதற்காகத்தான் இந்த திராவிட மாடல் அரசு எந்தவிதமான சொத்து மதிப்பைக் காட்டாமல் பட்டியலின மக்கள் தொழில் தொடங்க கடன் அளிக்கிறது. இது மாபெரும் உதவி. இதைக் கொண்டு ஒருவர் முன்னேறிவிடலாம்" என்கிறார் கிருஷ்ணதாஸ்.
சங்ககிரியைச் சேர்ந்த கெளரி சங்கர்:
இவரைத் தொடர்ந்து பேசிய கெளரி சங்கர், "நான் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவன். நான் பி.இ படித்திருக்கிறேன். நான் பொறியியல் படிக்கும்போதே உடன் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து வருங்காலத்தில் தொடங்கப் போகின்ற நிறுவனத்திற்குப் பெயர் ஒன்றை வைத்திருந்தோம். அந்தப் பெயரில்தான் இப்போது ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.
எங்கள் நிறுவனம் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோரால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மேக் இன் தமிழ்நாடு என்று ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. அதன்மூலம் நாங்கள் 25 பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறோம்.

முதன்முதலாகச் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என நினைத்தபோதுதான் சமூக வலைத்தளத்தில் 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' சம்பந்தமான ஒரு அறிவிப்பு அட்டையைப் பார்த்தோம். உடனே நாம் ஏன் இதற்கு விண்ணப்பிக்கக் கூடாது என்ற யோசனை வந்தது. உடனே செய்தோம்.
அதிகாரிகள் உடனடியாக எங்களுக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கினர். அனைத்து நடைமுறைகளும் மிக வேகமாக நடந்தது. நினைத்த மாதிரியே கடனுதவியும் கிடைத்தது.
'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' என்ற திட்டத்தை பொறுத்தளவில் மிகச் சுறுசுறுப்பாக இயக்கக் கூடிய திட்டம். அங்கே உதவிக் கேட்டுச் சென்றாலே நமக்குள் ஒரு நேர்மறையான எண்ணங்கள் வலுப்பெறத் தொடங்கிவிடும்" என்கிறார்.

மேலும் அவர், "தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' என்பது கடன் அளித்துவிட்டு அவர்கள் வேலையைப் பார்ப்பதில்லை. அரசு எனக்கு 3 கோடி கடனுதவி செய்கிறது என்றால், அதுவும் ஒரு பங்குதாரராக என நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
கூடவே எங்கள் நிறுவனத்தைச் சர்வதேச அளவில் வளர்க்க, வெளிநாடுகளில் நடக்கும் தொழில்முனைவோர் மாநாடுகளில் எங்களைப் பங்கேற்க வழி ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம் வெளிநாட்டில் உள்ள பலர் 'ஏஞ்சல் முதலீட்டாளர்களாக' எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வருகிறார்கள்.

ஆகவேதான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசின் 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டம் தனித்துவமான ஒரு திட்டம்" என்கிறார் கெளரி.
வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த சாந்தராஜ்:
சாந்தராஜ் பெரியசாமி. இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர். இங்குதான் இவர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம். இப்போது சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆட்டோ மொபைல் இண்ட்ரஸ்ட்ரீகளுக்கு மென்பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்வதுதான் இவரது நிறுவனத்தின் வேலை.
"பட்டியலினத்தவர்களுக்கு இன்றைக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நிறையவே கிடைத்துள்ளது. ஆனால், அம்பேத்கர் சமூக பொருளாதார முன்னேற்றம்தான் பட்டியலின மக்களுக்கு மிக முக்கியமாகக் கிடைக்கவேண்டிய உரிமை என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்வியும் வேலை வாய்ப்பும் தன்னிறைவை அடையச் செய்யாது என்று அவர் சொல்லி இருக்கிறார். ஆகவேதான் சமூகநீதியைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பட்டியலின மக்கள் தொழில்முனைவோராக வளர்ந்து வரவேண்டும் என்பதற்காக எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில் முனைவோருக்கான அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம் என்ற ஒன்றை நடைமுறைப் படுத்தியுள்ளது. அதற்காகப் பல கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
நிதியை ஒதுக்கினால் மட்டும் போதாது. அதைத் தகுதி வாய்ந்தவர்கள் கையில் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் அது வெற்றியாக மாறும். அந்தளவில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது" என்கிறார் சாந்தராஜ் பெரியசாமி.
திட்டமிடல் சரியாக இருந்தால் வெற்றிக்கான பாதையும் சரியாகவே இருக்கும்!












Click it and Unblock the Notifications