சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் போது ஏழைமக்கள் உணவில்லாமல் தவித்ததை அடுத்து அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 45 நாட்களாக இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மட்டுமே எந்த தளர்வுகளும் இல்லை. மற்ற 25 மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து அம்மா உணவகங்களில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. டிடிவி தினகரனும் அம்மா உணவகங்களில் மே 31 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மே 31 ஆம் தேதி வரை மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முதல்வரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இலவச உணவு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் எஸ் பி வேலுமணி.












Click it and Unblock the Notifications