இலவச கேஸ், பெண்களுக்கு 1500 ரூபாய்.. கற்பனை வாக்குறுதிகளை அள்ளி வீசும் முதல்வர்.. ஜவாஹிருல்லா தாக்கு
சென்னை அதிமுகவின் இலவச கேஸ், பெண்களுக்கு 1500 ரூபாய் உதவி தொகை ஆகிய அறிவிப்புகள் முதல்வரின் தோல்வி பயத்தின் பிரதிபலிப்பு என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவின் இலவச கேஸ், 1500 ரூபாய்: முதல்வரின் தோல்வி பயத்தின் பிரதிபலிப்பு என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த தமிழக விடியலுக்கான தொலைநோக்குத் திட்ட அறிக்கையின் ஏழு அம்ச உறுதிமொழிகளைக் கண்டு, தோல்வி பயத்தின் எல்லைக்கே சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பத்திற்கு வருடம் ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாகவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகையும் வழங்கப்படும் என்று மகளிர் தினத்தை முன்னிட்டு அறிவித்திருப்பதைத் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
2016 சட்டசபை தேர்தலில் மறைந்த ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவித்த, குடும்பத்துக்கு ஒரு விலையில்லா செல்போன் திட்டம், மாணவர்களின் வங்கி கல்விக் கடன் ரத்து, அம்மா பேங்கிங் கார்டு, இலவச டி.வி. செட்டாப் பாக்ஸ் போன்ற பல்வேறு திட்டங்களைக் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றவில்லை. எனவே வார்த்தைக்கு வார்த்தை 'இது அம்மாவின் ஆட்சி' என்று வாய்ச்சவடால் விடும் முதல்வரின் இந்த அறிவிப்பைத் தமிழக மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துவிட்டது. ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த நீட் தேர்வு, தேசிய புதிய கல்விக் கொள்கை, உதய் மின்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதரவும், அனுமதியும் அளித்த அதிமுக அரசு, மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. இதை தெளிவாகப் புரிந்து வைத்துள்ள முதல்வர், மக்களை திசைதிருப்பி மறக்கடிக்க வைத்து வெற்றிபெற்று விடலாம் என்ற கனவில் மீண்டும் கற்பனைக் கதைகளை தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீசி வருகிறார்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications