தமிழக வளர்ச்சிக்கு ”இலவசங்கள்” மிகமுக்கியக் காரணம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!
சென்னை: மக்களின் அவசியத் தேவைகளை அவசியம் உணர்ந்து அரசு இலவசமாக வழங்கியது தான் தமிழக வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், மாணவ, மாணவியர்களுக்கு தரமான மிதிவண்டிகளை வழங்கி வருகிறோம். மிதிவண்டியின் தரத்தில் அரசு சார்பாக எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக வந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கொரோனா என்பது உலகளாவிய பிரச்னை. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இதே நிலை தொடர வேண்டும் என்றால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் வேகமாக செலுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோல் செப்டம்பர் மாத இறுதியுடன் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான காலக்கெடு முடிவடைகிறது. இதனால் மக்கள் அனைவரும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியை விரைந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து இலவசம் வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இலவசங்கள் யாருக்கு வழங்க வேண்டும், யாருக்கு வழங்க கூடாது என்பது ஒருபக்கம் இருக்கிறது. அதேபோல் எது இலவசம், எது அவசியம் என்பதும் ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் தமிழக அரசு அவசியங்களை தான் இலவசமாக வழங்கி வருகிறது.
மாணவர்கள் நேரம் தவறாமையை கடைபிடிக்க இலவச மிதிவண்டிகளை வழங்குகிறது. இன்று தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளிலும் முதலிடத்தில் இருக்க காரணம், மக்களின் அவசிய தேவைகளை அவசியம் உணர்ந்து தமிழக அரசு இலவசமாக வழங்கியது தான் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications