பாம்பை பிடித்து விளையாடும் குழந்தை.. சிங்கம்.. தவெக விஜய் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட அடைமொழிகள்!
சென்னை: தவெக முதல் மாநாட்டின் போது பயம் இல்லாத குழந்தை பாம்பை பிடிப்பது போல அரசியலுக்கு வந்துள்ளதாக தன்னைப் பற்றி பேசினார் விஜய். இன்று சிங்கம் என தன்னைப் பற்றிப் பேசியுள்ளார். இப்படி விஜய் தன்னைப் பற்றியே பேசியவற்றைப் பார்க்கலாம்.
அரசியல் ஒரு பாம்பு. பயமறியா ஒரு குழந்தையைப் போல அதைக் கையில் பிடித்து விளையாடுகிறேன் என முந்தைய மாநாட்டில் பேசிய விஜய், இன்று தன்னை ஒரு சிங்கம் எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

தவெக விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் மக்களுக்காக சேவையாற்றும் வகையில் அரசியல் களத்திற்குள் அடி எடுத்து வைத்துள்ளார் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலை முதல் முறையாக சந்திக்கிறது தவெக. விஜய்யின் முதல் அரசியல் மாநாடானது விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.
முதல் மாநாட்டில் பேசிய விஜய், "ஒரு குழந்தை முதல்முறையாக அம்மா என்று சொல்லும்போது அந்த அம்மாவிற்கு ஒருவித சிலிர்ப்பு வரும். அந்த சிலிர்ப்பு எப்படி என்று அந்த அம்மாவைக் கேட்டால் தெளிவாக விளக்கிச் சொல்ல முடியும். ஆனால், அந்த உணர்வு எப்படி இருந்தது என்று அந்த குழந்தையிடம் கேட்டால், அந்தக் குழந்தை எப்படிச் சொல்லும்? அது உணர்ந்த சிலிர்ப்பை, சிலாகிப்பை வார்த்தையில் சொல்வதற்கு அந்தக் குழந்தைக்கு தெரியாது அல்லவா? அப்படி ஓர் உணர்வோடுதான் நான் உங்கள் முன் நிற்கிறேன்.
பாம்பை பிடித்து விளையாடும் குழந்தை
அதேநேரத்தில் அம்மாவிடமும்கூட உணர்வைக்கூட சொல்லத் தெரியாமல் சிரிக்கிற அந்தக் குழந்தைக்கு முன்னாலே ஒரு பாம்பு வந்து படம் எடுக்கிறது என்றால், என்ன நடக்கும்? யார் முன்னாடி வந்து ஒரு பாம்பு நின்றாலும் விழுந்தடித்து ஓடிவிடுவார்கள். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என ஒரு பழமொழியே இங்கே இருக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை என்ன செய்யும் தெரியுமா? தன்னுடைய அம்மாவைப் பார்த்துச் சிரித்த அதே சிரிப்புடன் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் அந்தப் பாம்பையும் தன் கையில் பிடித்து விளையாடும்.
இங்கு, அந்தப் பாம்புதான் அரசியல், அதைக் கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பதுதான் உங்கள் தலைவருடைய வேலை. அரசியலுக்கு நாம் குழந்தைதான். இது, அடுத்தவர்களின் கமெண்ட். ஆனால் பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய கான்ஃபிடண்ட். அதனால் பாம்பாக இருந்தாலும் பால்டிக்ஸாக இருந்தாலும் கையில் எடுக்க வேண்டும் என முடிவு செய்ததற்குப் பிறகு, சீரியஸோடும் கொஞ்சம் சிரிப்பையும் சேர்த்து செயல்படுவதுதான் நம்முடைய வழி." எனப் பேசினார் விஜய்.
சிங்கம்
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய், "சிங்கம் எப்போதும் தனித்துவமானாது. ஒரு சிங்கம் கர்ஜனை செய்தால் அந்த சத்தத்தில் 8 கி.மீ. வரை அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கும் மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. அதிலும் கூட தன்னை விட பெரிய விலங்குகளை தான் குறிவைத்து தாக்கும். ஜெயிக்கும். எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாததை, கெட்டுப் போனதை தொட்டுக் கூட பார்க்காது.
அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு சுலபமாக எதையும் தொடாது, தொட்டால் விடாது. காட்டின் நான்கு பக்கமும் தனது எல்லையை தானே வகுக்கும். காட்டையே தனது கட்டுப்பாடில் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டமாக இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் அனைவருக்கும் தண்ணி காட்டும்." எனப் பேசியுள்ளார் விஜய்.












Click it and Unblock the Notifications