செப். 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: வரும் செப். 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது.
இடையில் கொரோனா முதல் அலை குறைந்த போது, பள்ளி, கல்லூரிகள் சில காலாம் திறக்கப்பட்டன. இருப்பினும், அப்போது கொரோனா 2ஆம் அலை தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகள் உடனடியாக மூடப்பட்டன.

பள்ளி கல்லூரிகள் திறப்பு
தற்போது கொரோனா 2ஆம் அலையும் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்றும் மாணவர்கள் சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் செப்டம்பர் 1இல் தொடங்கப்படுகிறது. இதர வகுப்புகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இலவசமாகப் பயணிக்கலாம்
பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக பஸ் பாஸ் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனாவால் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்ததால் பஸ் பாஸ் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் செப். 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள் வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வு மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.

அடையாள அட்டை மற்றும் சீருடை
எனவே, 2021-22 கல்வியாண்டில் மாணவர், மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்கள் இடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்று வரக் கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கல்லூரி மாணவர்கள்
அதேபோல அரசு கல்லூரி அரசு, பலதொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை சென்று வரக் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாணவர்கள்
தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ. மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும்.











Click it and Unblock the Notifications