இந்தா வாங்கிக்கோ.. அடுத்த குண்டை தூக்கிப் போடும் மோடி அரசு! எகிறப் போகுது பெட்ரோல், டீசல் விலை?
சென்னை: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றத்தின் தாக்கம் இந்திய எரிபொருள் சந்தையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ப்ரீமியம் வகை பெட்ரோல் விலை, வணிக கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை அதிகரித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டுவருகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சமீபத்தில் 126 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது.

இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இடையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களிலும் விலை குறைக்கப்படாததோடு, உயர்ந்த காலங்களிலும் உடனடியாக உயர்த்தப்படவில்லை. அந்த சமநிலையை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது வருமானத்தை பயன்படுத்தி பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாகவே இருப்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் ரூ.20 வரை, டீசலில் சுமார் ரூ.100 வரை இழப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த இழப்பை நீண்ட காலம் தாங்கிக் கொள்வது சாத்தியமில்லை என்பதால், விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலையாகி வருகிறது.
சமையல் எரிவாயு
இதற்கிடையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்கனவே கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையும் உயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வு செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தால் அதன் தாக்கம் போக்குவரத்து கட்டணம் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்திலும் பிரதிபலிக்கும்.
பெட்ரோல், டீசல் விலை
மத்திய அரசு தரப்பிலிருந்து வெளிவந்துள்ள தகவல்களும் இந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன. "பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்த்தப்படலாம் என்பதை மறுக்க முடியாது" என்று அதிகாரிகள் கூறியிருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் எரிபொருள் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் பதற்றம்
சர்வதேச சந்தை நிலைமைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஈரான் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வும் நடந்தால் அது பொதுமக்களின் தினசரி செலவினங்களை மேலும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை வர்த்தகத்துறையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஒருவேளை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் உணவுப் பொருட்கள் விலையும் கணிசமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications