கொரோனா இரண்டாவது அலை வீரியம்... தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா? - முதல்வர் பழனிச்சாமி சொல்வதென்ன
தமிழகத்தில் சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் போதுமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் மருத்துவக் குழுவினரின் ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரசு அறிவித்துள்ள வழிமுறையை பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது எனவும் முதல்வர் கூறியுள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் போதுமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் பத்தாம் தேதி முதல் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிச்சாமி
கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசியினை செலுத்தும் பணி துவங்கிய நிலையில்,தற்போதும் ஐந்தாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச்11 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
சேலத்தில் முதல்வர் தடுப்பூசி
இந்த நிலையில், 29 நாட்களான பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள அரசு மருத்துவமனை முதல்வர் அறையில் செலுத்திக் கொண்டார். முதல்வருடன் பாதுகாப்பு காவலர்கள், கார் ஓட்டுனர், உள்ளிட்டோரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரவல் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது கட்டமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். தடுப்பூசி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழ்நாட்டில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 95.31 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாக கூறினார்.
20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு
தமிழகத்திற்கு இதுவரை 54 லட்சத்து 85 ஆயிரம் 760 தடுப்பூசிகள் வந்துள்ளன. தமிழகத்தில் 34,87,036 பேர் இதுவரை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர். சேலத்தில் 1,94,461 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
நோய் கண்டறிதல்
தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. போதுமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா சிகிச்சை மருந்துகள், உபகரணங்கள் முகக்கவசம் போதுமான அளவு உள்ளது.அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை, ஏற்கனவே அரசாங்கம் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கட்டுப்பாடு அவசியம்
தற்போது வேகமாக அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அரசாங்கம் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள வழிமுறையை பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது. தொற்றின் வேகம் அதிகரித்தால், மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின் படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.