ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன? காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் சொன்னது இதுதான்
சென்னை: தமிழகம் முழுவதும் அதிர வைத்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் 8 பேர் சரண் அடைந்த நிலையில், அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு 7 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில், உடனடியாக கொலையாளிகளை கைது செய்ய 10 தனிப்படைகளையும் காவல் துறை அமைத்தது.

8 பேர் கைது: கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில், இரவில் 8 பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராகு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்னன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது), முன் விரோதம் காரணமாக பெரம்பூர், செம்பியம் PS எல்லையில் உள்ள வேணுகோபால் சாமி கோவில் தெருவில் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டார்.
அஸ்ரா கார்க் பேட்டி: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 10 காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்ற சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை தொடர்கிறது" என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே காவல் அதிகாரி அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " 8 பேரை கைது செய்துள்ளோம். முதல் கட்ட விசாரணை நடைபெறுவதால் மற்ற விவரங்களை தற்பொது கூற இயலாது. விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்" என்றார்.
ஆம்ஸ்டராங்க் கொலை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வருகிறார். இதனால், அவர் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தினமும் இரவு பெரம்பூரில் தான் கட்டும் புதிய வீடு அருகே நண்பர்கள், கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்.
பைக்கில் வந்த 6 பேர்: அதுபோல, நேற்று இரவு 7 மணியளவில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 பைக்கில் அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், கையில் பட்டா கத்தியுடன் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியுள்ளது. இதில் , ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் அலறியபடி கீழே சாய்ந்தார். அவருடன் இருந்த அவரது நண்பர்கள் வீரமணி, பாலாஜி ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க பார்த்தனர்.
ஆனால், அதற்குள் கொலையாளிகள் 6 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதில், பாலாஜி என்பவருக்கும் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
8 பேர் சரண்: கொலை நடந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களும், ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். கொலையாளிகள் 6 பேரும் உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் அணியும் சீருடைகளை அணிந்திருந்தனர். அவர்களை பிடிக்க சென்னை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடயே தான் 8 பேர் சரண் அடைந்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications